மேட்டூர் அருகே சாலை விபத்தில் தம்பதி பலி- கொளத்தூர் மணி கார் மோதியதா? என விசாரணை
வாகன விபத்தில் தம்பதி பலியானதற்கு திராவிடர் விடுதலை கழகத் தலைவர் கொளத்தூர் மணி கார்தான் மோதியதா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை: மேட்டூர் அருகே திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணியின் கார் மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதி பலியானதாக வெளியான தகவலால் பரபரப்பு ஏற்பட்டது.
மேட்டூரில் இருந்து சேலத்துக்கு காரில் கொளத்தூர் மணி சென்று கொண்டிருந்தார். அப்போது சாத்தப்படி என்ற இடத்தில் கொளத்தூர் மணி கார் மீது இருசக்கர வாகனத்தில் சென்ற கோட்டகவுண்டன்பட்டியைச் சேர்ந்த ராஜேந்திரன் (வயது 46), விஜயா (வயது 40) ஆகியோர் மோதி உயிரிழந்தனர்.
இதனால் கொளத்தூர் மணியின் கார் மோதிதான் இந்த விபத்து ஏற்பட்டுவிட்டதாக தகவல்கள் பரவின. ஆனால் ராஜேந்திரன்-விஜயா தம்பதியினர் சென்ற இருசக்கர வாகனம் மற்றொரு வாகனத்தின் மீது மோதியிருக்கிறது.
அதில் அவர்கள் இருவரும் தூக்கிவீசப்பட்டு தங்களது கார் மீது விழுந்து உயிரிழந்தனர் என போலீசாரிடம் கொளத்தூர் மணி விளக்கம் அளித்திருக்கிறார். இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இருப்பினும் கொளத்தூர் மணியின் கார் மோதியே விபத்து நிகழ்ந்தது என போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரது கார் ஓட்டுநரை கைது செய்ய வாய்ப்புள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.