ஆங்கிலேய சர்வாதிகார ஆட்சியை நினைவுபடுத்துகிறது.. நெல்லை தடியடி பற்றி கொளத்தூர் மணி!
சென்னை: தமிழக மக்களின் உரிமைக்காக தமிழகத்தின் தண்ணீர்த் தேவையை கருத்தில் கொண்டு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் தலைமையில் அமைதியாக நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காவேரி உட்பட பலர் காவல்துறையின் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளது, காவல்துறையின் அலட்சியப்போக்கை வெளிப்படுத்துகிறது. அறவழியில் போராடும் மக்களின் மீது இது போன்று நடத்தப்படும் தாக்குதல்கள் ஆங்கிலேய சர்வாதிகார ஆட்சியையே நினைவுபடுத்துகிறது என்று கொளத்தூர் மணி கூறியுள்ளார்.
திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி வெளியிட்டுள்ள அறிக்கை:
தாமிரபரணி ஆற்றின் நீரை உறிஞ்சி விற்பனை செய்யும் பன்னாட்டு குளிர்பான ஆலையை மூடக்கோரி தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் நடத்தப்பட்ட காவல்துறையினரின் தாக்குதலில் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் உட்பட பலர் கொடுங்காயம் அடைந்துள்ளனர்.
காவல்துறையின் இந்த ஜனநாயக விரோதப் போக்கை திராவிடர் விடுதலைக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.
பொதுவாக பொதுமக்கள் குடிநீர் பிரச்சனைக்காகவோ, போக்குவரத்து வசதிகளுக்காகவோ, சுகாதாரச் சீர்கேடுகளுக்காவோ, குடிமைப் பொருட்களுக்காகவோ போராட்டம் நடத்தினால் அதற்குரிய அதிகாரிகள் வந்து பேசி சமரசம் செய்வார்கள். ஆனால் கடந்த 10-15 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களின் எந்தவிதமான போராட்டங்களாக இருந்தாலும் காவல்துறை மட்டுமே வந்து மக்களிடம் பேசுவதும் போராட்டக்காரர்கள் மீது வன்முறையினை நிகழ்த்துவதும் தொடர்கதையாகி வருகிறது இதை தமிழகத்தை ஆளும்கட்சிகள் கண்டும் காணாமல் இருப்பதால் காவல்துறையின் அத்துமீறல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தமிழக மக்களின் உரிமைக்காக தமிழகத்தின் தண்ணீர்த் தேவையை கருத்தில் கொண்டு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் தலைமையில் அமைதியாக நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காவேரி உட்பட பலர் காவல்துறையின் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளது, காவல்துறையின் அலட்சியப்போக்கை வெளிப்படுத்துகிறது. அறவழியில் போராடும் மக்களின் மீது இது போன்று நடத்தப்படும் தாக்குதல்கள் ஆங்கிலேய சர்வாதிகார ஆட்சியையே நினைவுபடுத்துகிறது.
இந்த அத்துமீறலில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் மீது தமிழக காவல்துறை உரிய நடவடிக்கை எடுப்பதோடு இந்தத் தவறுகள் இனி நடக்காமல் இருக்க தமிழக காவல்துறையும் தமிழக அரசும் முன்வர வேண்டும் என திராவிடர் விடுதலைக் கழகம் கேட்டுக்கொள்கிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.