அதிர்ச்சியாக இருக்கிறது.. பெற்றோர்களே உஷார்.. ப்ளூ வேல் கேம் 'வீரர்கள்' சென்னையில் அதிகமாம்!
உயிர்க்கொல்லி ஆன்லைன் விளையாட்டான ப்ளூ வேல் கேமை சென்னையில் ஏராளமான இளைஞர்கள், சிறுவர் சிறுமிகள் தங்களின் மொபைல்களில் டவுன்லோடு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை: உயிர்க்கொல்லி இணையதள விளையாட்டான ப்ளூ வேல் கேம் விளையாடும் நபர்கள் சென்னையில் அதிகம் உள்ளதாக ஆய்வு முடிவுகள் எச்சரிக்கின்றன.
இது தொடர்பாக நடத்தப்பட்ட இணையதள ஆய்வு ஒன்றில், ப்ளூ வேல் கேம் தேடுதலில், கொல்கத்தா நகரம், இந்திய அளவில் முதலிடத்தில் உள்ளது தெரியவந்துள்ளது. அதே போல கொல்கத்தா நகருக்கு அடுத்த இடத்தை தமிழக தலைநகர் சென்னை பிடித்துள்ளது.
Recommended Video
தற்போது, ப்ளூ வேல் சேலஞ்ச் என்ற விளையாட்டு, உலக அளவில், டீன் ஏஜ் இளைஞர்களிடையே பிரபலமாகி வருகிறது. இதனால், தற்கொலைகள் நடைபெறுவதும் அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் நேற்று மதுரை அருகே கல்லூரி மாணவர் ஒருவர் இறந்தார். இன்று புதுச்சேரியில் மாணவர் ஒருவர் இறந்தார்.
ப்ளூ வேல் விளையாடும் 30 உலக நகரங்கள்
கூகுள் தேடுபொறியில் ப்ளூ வேல் விளையாடும் நபர்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அதில் உலகம் முழுக்க 30 நகரங்களில் ப்ளூ வேல் 'வீரர்கள்' அதிகம் உள்ளதாக தெரியவந்துள்ளது.
கொல்கத்தா முதலிடம்
இந்நிலையில், சர்வதேச அளவில் ப்ளு வேல் பற்றி கூகுளில் தேடுவதில் கொல்கத்தா நகரம் முன்னிலை வகிப்பதாக தெரியவந்துள்ளது. கடந்த 12 மாதங்களாக, கொல்கத்தா நகர வாசிகள், ப்ளூ வேல் சேலஞ்ச் விளையாட்டு பற்றி, அதிகளவில் தேடுவதாக கூகுள் ரிப்போர்ட் கூறியுள்ளது.
அமெரிக்காவை முந்திய இந்தியா
இதற்கடுத்த இடங்களில், சான் அன்டோனியா (அமெரிக்கா), நைரோபி (கென்யா), நகரங்கள் உள்ளன. இந்தியாவின் குவாஹாட்டி (அஸ்ஸாம்) சென்னை , பெங்களூரு , மும்பை , டெல்லி ஆகிய நகரங்களும் உள்ளன. சர்வதேச அளவில் இந்தியா 3வது இடத்தில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
சென்னை வாசிகள் உஷார்
சென்னை பெற்றோர்கள் ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் தங்கள் டீன் ஏஜ் பிள்ளைகளை பாதுக்காக்க களம் இறங்கவேண்டிய நேரம் இது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். எப்போதும் ஸ்மார்ட் போனில் வசிக்கும் குழந்தைகளை காப்பாற்ற வேண்டும் என்றும் அவர்கள் மேலும் கூறுகிறார்கள்.