களவு போகுது “கொல்லிமலை ரகசியங்கள்” – மூலிகைகள் கடத்திய 4 பேர் கைது
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையிலிருந்து மூலிகைச்செடிகளை கடத்திச் சென்ற பெண் உள்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை வனப்பகுதியில் அரிய வகை மூலிகைச் செடிகள் நிறைந்துள்ளன. அவற்றை வெட்டி எடுப்பதற்கு வனத்துறையினர் முன் அனுமதி பெறவேண்டும்.
ஆனால் சட்டவிரோதமாக சிலர் அரிய வகை மூலிகை செடிகளை வெட்டி கடத்திச் சென்று விற்பனை செய்து வருகின்றனர். இது குறித்து கொல்லிமலை வனச்சரகர் சுரேந்திரனுக்கு வந்த தகவலை அடுத்து வனத்துறையினர் நேற்று முன்தினம் அதிகாலை கொல்லிமலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது கொல்லிமலை வனத்துறை சோதனைச்சாவடி அருகே வந்த ஒரு ஆம்னி காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அரிய வகையை சேர்ந்த காட்டு எலுமிச்சை , காட்டு கொள்ளு, தாட்பூட் கொடி, உரிகட்டு கொடி, காட்டு மல்லி கொடி, பாப்பராங் கொட்டை, முடக்கத்தான் கொடி உள்பட 14 வகையான மூலிகை செடிகளை வெட்டி எடுத்து காரில் கடத்துவது தெரிந்தது.
இதனையடுத்து காரிலிருந்த சேலம் மாவட்டம் கே.ஆர்.தோப்பூரை சேர்ந்த ராமாயி, வேலு, முருகன், கார் டிரைவர் சண்முகம் ஆகிய நால்வரையும் வனத்துறையினர் கைது செய்தனர்.
இவர்கள் காரின் மூலமாக பல ஆண்டுகளாக வனத்துறை அனுமதியின்றி கொல்லிமலையில் இருந்து மூலிகைச் செடிகளை வெட்டி கடத்திச் சென்று விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் தனபால் உத்தரவுப்படி நான்கு பேருக்கும் தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.