மண்டல மாநாடுகள் பாமகவுக்குத் திருப்பம் தரும்... ஜி.கே.மணி
கோவை: பாமக நடத்தும் மண்டல மாநாடுகள் பாமகவுக்கு பலம் தரும். குறிப்பாக கொங்கு மண்டல மாநாடு திருப்பத்தை ஏற்படுத்தும் என்று பாமக தலைவர் ஜி.கே.மணி கூறியுள்ளார்.
கோவை வந்த அவர் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் தூய்மையான அரசியல், நேர்மையான தேர்தல், மது இல்லாத ஆட்சி மலர வேண்டும். 2016ல் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும். இதை வலியுறுத்தி ஜூலை 12ம் தேதி கோவையில் கொங்கு மண்டல மாநாட்டை நடத்த உள்ளோம். கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கரூர், நாமக்கல் ஆகிய 6 மாவட்டங்களை உள்ளடக்கி இந்த மாநாடு நடத்தப்படுகிறது. மாநாட்டில் பா.மக. நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ், பா.ம.க. முதல்வர் வேட்பாளர் அன்புமணி மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.
கொங்கு நாட்டின் முக்கிய பிரச்சினையான பஞ்சாலை பிரச்சினையை தீர்க்க வேண்டும், தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும், அன்னியச்செலாவணி ஈட்டித் தரும் பின்னலாடை தொழிலை மேம்படுத்த வேண்டும், அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தும் வகையில் இந்த மாநாடு அமையும்.
மாநாடு நடைபெற உள்ள இடத்தை தேர்வு செய்யவும், நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தவும் கோவை வந்துள்ளேன். கோவையில் நடைபெறும் கொங்கு மண்டல மாநாட்டில் 10 லட்சம் பேர் பங்கேற்பார்கள். கோவையில் நடைபெறும் பா.ம.க.வின் கொங்கு மண்டல மாநாடு அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தும் அடித்தளமாக அமையும்.
ஏற்கனவே சேலம் மற்றும் கங்கைகொண்ட சோழபுரத்தில் மாநாடு நடத்தி உள்ளோம். வடக்கு மண்டல மாநாடு ஜூலை 26-ல் வேலூரிலும், மதுரையில் பாண்டிய மண்டல மாநாடு ஆகஸ்டு மாதத்திலும் நடைபெற உள்ளது. விழுப்புரம் மண்டல மாநாடு மற்றும் தென்பாண்டி மண்டல மாநாடும் நடத்த உள்ளோம்.
கருணாநிதி இல்ல திருமண விழாவில் அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்றது நட்பின் அடிப்படை மற்றும் கலாசாரத்தை நிலைநிறுத்தும் செயலாகும். திருமண சந்திப்புக்கும், தேர்தல் கூட்டணிக்கும் சம்பந்தம் இல்லை. பா.ம.க. எப்போதும் இடைத்தேர்தலில் போட்டியிடுவதில்லை. யாரையும் ஆதரிப்பதில்லை. அதன்படியே ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிடவில்லை என்றார் மணி.