உச்சநீதிமன்ற தீர்ப்பு.. சசிகலாவுக்கு சம்மட்டி அடி.. சொல்கிறார் கொங்குநாடு ஈஸ்வரன்
சொத்துக்குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு ஊழல் அரசியல்வாதிகளுக்கு சம்மட்டி அடியாக விழுந்திருக்கிறது என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சித் தலைவர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு ஊழல் அரசியல்வாதிகளுக்கு சம்மட்டி அடியாக விழுந்திருக்கிறது என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சித் தலைவர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். சொத்துக் குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை வரவேற்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று இறுதி தீர்ப்பு வழங்கியது. அதில் சசிகலா, இளவரசி,
சுதாகரன் ஆகிய மூன்று பேரும் குற்றவாளி அறிவித்த உச்சநீதிமன்றம் 3 பேரும் உடனடியாக சரணடைய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
ஊழலுக்கு எதிரான உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ள கொங்குநாடு மக்கள் தேசிய கட்சித் தலைவர் ஈஸ்வரன் குற்றவாளி கையில் அரசை கொடுக்க நினைத்தவர்கள் வெட்கப்பட வேண்டும் என கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஊழல்வாதி சசிகலா குற்றவாளி என உச்சநீதிமன்றம்தீர்ப்பு வழங்கியதை வரவேற்கிறோம். இந்தியாவில் ஊழல் அரசியல்வாதிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியிருக்கின்ற தீர்ப்பு. ஜெயலலிதா தலைமையிலான அண்ணா தி.மு.க ஆட்சி ஊழல் நிறைந்த ஆட்சி என்பதை தீர்ப்பு உறுதி செய்திருக்கிறது.
சம்மட்டி அடியாக விழுந்திருக்கிறது
சொத்துக்குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கி இருக்கின்ற தீர்ப்பு இந்தியாவில் ஊழல் அரசியல்வாதிகளுக்கு சம்மட்டி அடியாக விழுந்திருக்கிறது. எதிர்காலத்தில் கூட அரசு பொறுப்பிற்கு வருகின்ற அரசியல் தலைவர்கள் சொத்து சேர்ப்பதற்கான எண்ணமே வர கூடாத அளவிற்கு தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
அரசியல் குழப்பங்களுக்கு தீர்வு
தமிழகத்தினுடைய அரசியல் குழப்பங்களுக்கு தீர்வை தருகின்ற தீர்ப்பாகவும் இது அமைந்திருக்கிறது. மொத்த தமிழகம் மட்டுமல்ல, இந்தியாவே தீர்ப்பை கேட்டு மகிழ்ச்சி அடைந்திருக்கிறது. நீதிமன்றத்தின் மீது மிகப்பெரிய நம்பிக்கையை உருவாக்கி இருக்கிறது. பல நேரங்களில் நீதிமன்றங்களின் மீது வைக்கப்பட்ட குற்றசாட்டுகள் விலக்கி கொள்ளப்பட்டுள்ளது என்றே எடுத்து கொள்ளலாம்.
வரிப்பணம் திருடப்பட்டிருக்கிறது
வழங்கப்பட்டிருக்கின்ற தண்டனை சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு மட்டுமல்ல ஜெயலலிதாவுக்கும் சேர்த்துதான். மொத்தத்தில் அண்ணா தி.மு.க ஆட்சி ஊழல் ஆட்சியாக நடந்திருக்கிறது என்பதற்கான தண்டனைதான் இது. தமிழக மக்களுடைய வரிப்பணம் திருடப்பட்டு இருக்கிறது என்பதை உறுதி செய்த தீர்ப்புதான் இது. அண்ணா தி.மு.க ஆட்சியில் பங்கேற்றிருந்தவர்கள், உடனிருந்தவர்கள் அனைவரும் நிராகரிக்கப்பட வேண்டும் என்பதைதான் உச்சநீதிமன்றம் தீர்ப்பு விளக்குகிறது.
தருமமே வெற்றி பெற்றுள்ளது
பணமிருந்தால் எதையும் சாதிக்கலாம் என்று நினைப்பவர்களுக்கு மரண அடி விழுந்திருக்கிறது. எவ்வளவு பணம் இருந்தாலும் தீர்ப்பை விலைக்கு வாங்க முடியாது என்பதை நீதிபதிகள் நிரூபித்து இருக்கிறார்கள். தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வியது, மீண்டும் தருமமே வெற்றி பெற்றது. ஊழல் செய்து சொத்துக்குவித்த குற்றவாளியின் கையில் தமிழக அரசை ஒப்படைக்க நினைத்தவர்கள் வெட்கப்பட வேண்டும். இவ்வாறு ஈஸ்வரன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.