புதிய மணல் குவாரிகள் அமைப்பது பேராபத்தானது... கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி கண்டனம்!
தமிழகத்தில் புதிய மணல் குவாரிகளை அமைப்பது பேராபத்தானது என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
கோயம்புத்தூர் : தமிழகம் முழுவதும் புதிதாக 70 மணல் குவாரிகளை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டிருப்பது கண்டனத்திற்குரியது என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்தக் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது : மணல் தட்டுப்பாட்டை போக்கவும், விலையை குறைக்கவும் புதிய மணல் குவாரிகளை அமைப்பதாக காரணம் கூறுவது சரியானதாக இல்லை. கடந்த பல வருடங்களாக விதிகளை மீறி ஆற்றுப்படுகைகளில் இருந்து மணல் அள்ளி கொண்டு இருக்கிறார்கள்.
அளவுக்கு அதிகமான மணலை எடுத்தால் நிலத்தடிநீர் வெகுவாக குறைந்து விவசாயம் பாதிக்கப்பட்டிருப்பதோடு மட்டுமல்லாமல் குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. வரம்பை மீறி பல பகுதிகளில் மணல் அள்ளப்பட்டதால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய, சில ஆண்டுகள் ஆற்றுப்படுக்கைகளில் இருந்து மணல் அள்ளுவதை முற்றிலுமாக நிறுத்த வேண்டிய சூழ்நிலையில் இருக்கும் தமிழகத்தில் மேலும் பல புதிய மணல் குவாரிகள் அமைப்பது என்பது வருங்கால சந்ததிகளுக்கு பேராபத்தாக அமையும்.
புதிய மணல் குவாரிகளால் விவசாயம் மிகவும் கடுமையான பாதிப்பை சந்திக்கும். டெல்டா மாவட்ட விவசாயிகளும், விவசாயத்தை மட்டும் நம்பி இருக்கும் கோடிக்கணக்கான மக்கள் தங்களது வாழ்வாதாரத்தையே இழக்க நேரிடும். தமிழகத்தில் மணல் தட்டுப்பாட்டை போக்க மலேசியாவில் இருந்து மணல் இறக்குமதி செய்யும் வாய்ப்பிருக்கும் போது நம் மண்ணின் வளத்தை சுரண்டுவதிலேயே ஆட்சியாளர்கள் குறியாக இருப்பது ஏன் ?.
தமிழகத்தின் வளங்களை பாதுகாக்க வேண்டிய அரசு இயந்திரம், சுரண்டுவதில் கவனம் செலுத்துவது ஒட்டுமொத்த தமிழகத்துக்கே ஆபத்தை ஏற்படுத்தும். அண்டை மாநிலங்களில் ஆறுகள் இல்லையா ? இல்லை ஆற்றுப்படுகைகளில் மணல் இல்லையா ?. அண்டை மாநில அரசுகள் தங்களது மாநிலத்தின் வளங்களையும், விவசாயிகளையும் பாதுப்பதற்கான முயற்சிகளில் இறங்கி வெளிநாடுகளில் இருந்து மணல் இறக்குமதி செய்வதற்கு ஆர்வம் காட்டுகிறது.
இந்நிலையில், தமிழக அரசு மட்டும் தமிழகத்திற்கு மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களுக்கும் மணலை விற்பனை செய்வது எந்தவிதத்தில் நியாயம். தமிழக அரசின் வருமானத்திற்காக மணல் குவாரிகளை அதிகப்படுத்துகிறது என்றால் மணலை தவிர்த்து ஏற்கனவே இருக்கும் மற்ற தொழில்களை ஊக்குவிப்பதன் மூலம் வருமானத்தை ஈட்ட முடியும். எனவே தமிழக முதல்வர் புதிய மணல் குவாரிகள் அமைக்கும் திட்டங்களை கைவிட்டு மலேசிய மணலை விற்பனை செய்வதற்கான அனுமதியை வழங்கி, மேலும் மணலை அரசே இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது.