ஜெயேந்திரர் மறைவுக்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி இரங்கல்
ஜெயேந்திரர் சரஸ்வதி மறைவுக்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது.
Recommended Video
சென்னை: காஞ்சி ஜெயேந்திரர் சரஸ்வதி மறைவுக்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் சங்கரமடத்தின் மூத்த மடாதிபதியான ஜெயேந்திர சரஸ்வதி இன்று காலை மரணமடைந்தார். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஜெயேந்திரர் மறைவுக்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
காஞ்சி சங்கரமடம் தென்னிந்தியாவின் மிகப்பெரிய அடையாளம். வேற்று மாநிலத்தவர் மட்டுமல்ல வேற்று நாட்டவரும் விரும்பி வருகின்ற இடம். அத்தனை சிறப்பு வாய்ந்த சங்கரமடத்தின் சேவைகளில் 64 ஆண்டுகள் தன்னை ஈடுபடுத்தி கொண்ட மரியாதைக்குரிய ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆன்மீகத்தின் வாயிலாகவும், அதற்கு அப்பாற்பட்டும் செய்த பல சேவைகள் பாராட்டப்பட வேண்டியவை. விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் யாருமில்லை என்ற தத்துவத்தின் அடிப்படையில் விமர்சனங்களை சிரித்த முகத்துடன் ஏற்றுக் கொண்டவர். அவருடைய மறைவிற்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.