ஈரோடு மாநாட்டில் வேட்டுவ கவுண்டர்கள் காளிங்கராயன் படத்தை பயன்படுத்த எதிர்ப்பு!
வேட்டுவ கவுண்டர்கள் காளிங்கராயன் படத்தை பயன்படுத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
ஈரோடு: கொங்குநாடு வேட்டுவகவுண்டர்கள் நடத்தும் மாநாட்டு விளம்பரங்களில் காளிங்கராயன் படத்தை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கக்கோரி கொங்குநாடு இளைஞர்கள் பேரவையினர் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
]கொங்கு நாடு வேட்டுவகவுண்டர்கள் இளைஞர்கள் நலச்சங்கத்தின் மூன்றாம் மாநில மாநாடு நாளை மறுநாள் ஈரோட்டில் நடைபெறுகிறது. இதற்கு, அம்மா மக்கள் முன்னேற்ற தலைவர் டி.டி.வி.தினகரன் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். மேலும் இந்த மாநாட்டில் கொங்குநாடு வேட்டுவ கவுண்டர்கள் இளைஞர் சங்கத்தினை அரசியல் கட்சியாக மாற்றுவதற்கான அறிவிப்பும் வெளியிடப்படுகிறது.
இந்த மாநாட்டிற்காக மாவட்டம் முழுவதிலும் விளம்பர பதாகைகள் காளிங்கராயன் படத்துடன் வைக்கப்பட்டுள்ளன. இந்த விளம்பரங்களில் காளிங்கராயன் உருவ படத்தை பயன்படுத்தியது தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ளது. இதனையடுத்து விளம்பர பதாகைகளில் உள்ள காளிங்கராயன் படத்தை அகற்றக்கோரி கொங்குநாடு இளைஞர்கள் பேரவையினர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர்.
மேலும் காளிங்கராயன் கொங்குவேளார் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் அவரது படத்தை மற்றவர்கள் பயன்படுத்துவதற்கு தடை விதிக்க கோரியும் மனுவில் வலியுறுத்தியுள்ளனர். மனுவை பெற்று கொண்ட காவல்துறை கண்காணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.