வறட்சியால் இடம் பெயரும் கூந்தன்குளம் சரணாலய பறவைகள்
நெல்லை: நெல்லை மாவட்டம் கூந்தன்குளம் பறவைகள் சராணலயத்தில் இந்தாண்டு தண்ணீர் வற்றி வறட்சி ஏற்பட்டுள்ளதால் பறவைகள் இடம் பெற துவங்கியுள்ளன.
நெல்லையில் இருந்து 20 கிமீக்கு அப்பால் கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம் உள்ளது. 94ம் ஆண்டு முதல் கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம் அறிவிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
கூந்தன்குளத்திற்கு ஜெர்மனி, ஆஸ்திரேலியா, சைபீரியா, நைஜீரியா, பிலிம்பைன்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து பறவைகள் வரும். பின்டைல், பிளாக், லிங்டு ஸ்டில், கிரேகிரேன், கார்கானி, பிளமிங்கோ உள்ளிட்ட வெளிநாட்டு பறவைகள் ஒவ்வொரு ஆண்டும் அகடோபர் முதல் ஏப்ரல் மாதம் வரை இங்கு தங்கி கூடு கட்டி குஞ்சு பொறிக்கும்.
வெள்ளை அரிவாள் மூக்கன், பெலிக்கன், நீர்காகம், சாம்பல் நாரை உள்ளிட்ட உள்நாட்டு பறவைகளும் ஜனவரி முதல் ஆகஸ்ட் மாதம் வரை இங்கு தங்கியிருக்கும்.
இங்குள்ள குளம் மற்றும் ஊர் பகுதிகளில் உள்ள மரங்களில் கூடி கட்டி முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும்.
ஆடி அமாவாசைக்கு பிறகு சீசன் முடிந்து விடுவதால் அவை தங்கள் இளம் பறவைகளுடன் அந்தந்த பகுதிகளுக்கும், நாடுகளுக்கும் சென்று விடும்.
கடந்த இரு ஆண்டுகளாக நெல்லை மாவட்டத்தில் மழை சரியாக இல்லாததால் பறவைகள் குறைந்து போய் விட்டது.
கூந்தன்குளம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் ஏராளமான கருவேல மரங்கள் நிறைந்து காணப்படுகின்றன. இவற்றிலும் பறவைகள் கூடு கட்டுவது வழக்கம். இந்த நிலையில் சமீபகாலமாக மரங்கள் வெட்டப்பட்டு வருவதாக புகார் எழுந்து வருகிறது. இதன் விளைவாக வெளிநாடடு பறவைவகள் கூந்தன்குளத்தை புறக்கணிக்க துவங்கியுள்ளன.
வழக்கத்திற்காக மாறாக இந்த ஆணடு கூந்தன்குளத்தில் ஓரளவுக்கு தண்ணீர் இருந்தும் பறவைகள் வரவில்லை. தற்போது கோடை விடுமுறை என்பதால் குடும்பத்தோடு சுற்றுலா வரும் பயணிகள் பறவைகள் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறுகையில், மழை இல்லாததால் குளத்தில் போதிய தண்ணீர் நிரம்பவில்லை. இதனால் உள்ளூர் பறவைகள் கூட வரவில்லை. எனவே செயற்கையாக இங்கு தண்ணீரை நிரப்பினால் மட்டுமே பறவைகள் வரும். இல்லையென்றால் பருவமழை வநதால் மட்டுமே கூந்தன்குளத்திற்கு பறவைகள் திரும்பும் என்கின்றனர் வருத்தத்துடன்.