கூர்மா..ராமா...இப்போ அம்மா....விஷ்ணுவின் புதிய அவதாரம் அம்மாவாம்! - அதிமுக எம்எல்ஏ அடடே!
கடவுள் விஷ்ணு எடுத்தது தசாவரதாரம் அல்ல 11 அவதாரங்கள் என்று அதிமுக எம்எல்ஏ ஒருவர் சட்டசபையில் கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார்.
சென்னை: கடவுள் விஷ்ணுவின் 11வது அவதாரம் ஜெயலலிதா என்று மானாமதுரை தொகுதி எம்எல்ஏ மாரியப்பன் கென்னடி சட்டசபையில் பேசியுள்ளார்.
சட்டசபையில் ஜூன் 15ம் தேதி உயர்கல்வித்துறைக்கான மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது பேசிய மானாமதுரை தொகுதி எம்எல்ஏ மாரியப்பன் கென்னடி, கடவுளின் அவதாரம் 10 அல்ல பதினொன்று, அந்த பதினோராவது அவதாரம் ஜெயலலிதா அம்மா என்று கூறி அனைவரையும் அதிர வைத்தார்.
அதோடு நின்றுவிடவில்லை, ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் கட்சியை வழிநடத்த சரியான நபர் சசிகலா மட்டுமே. அவரே சிறப்பாக கட்சியை வழிநடத்தக் கூடியவர். டிடிவி. தினகரனும் கட்சியை கட்டுக்கோப்பாக கொண்டு செல்வார்.
சசிகலாவிற்கு கேட்ட ஜெ. குரல்
ஜெயலலிதா உயிரோடு இருக்கும் போது அவரை புகழ்ந்து சட்டசபையில் எம்எல்ஏக்கள் துதி பாடுவது என்பது வழக்கமான ஒன்று தான். சசிகலா முதன்முதலில் கட்சிப் பொறுப்பிற்கு வந்த போது தினமும் அம்மாவின் குரல் வந்து உன்னிடம் ஒன்றரை கோடி குழந்தைகளை விட்டு சென்றுள்ளதாக கூறியதாக தெரிவித்தார்.
ஓ.பன்னீர்செல்வம் சொன்ன ஆன்மா கதை
இதனைத் தொடர்ந்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதா சமாதி முன்பு அமர்ந்து தியானம் செய்தார். பின்னர் ஜெயலலிதாவின் ஆன்மா செய்த உந்ததல் காரணமாக இப்போது சில உண்மைகளை சொல்வதாக சொன்னார்.
வழக்கம் தான்
வழக்கமாக தேர்தல் சமயத்தில் அரசியல் மேடைகளில் ஜெயலலிதாவை கடவுள் போல சித்தரிப்பதை அதிமுகவினர் வழக்கமாகவே வைத்துள்ளனர். அவர் மறைந்த பின்னர் அதே போன்று தற்போது விஷ்ணுவின் பதினோறாவது அவதாரம் ஜெயலலிதா என்று கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார் எம்எல்ஏ மாரியப்பன் கென்னடி.
ஆச்சரியமில்லை
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரி கிளிண்டன் போட்டியிடவே ஜெயலலிதா தான் காரணம் என்று சொன்னவர்கள் அதிமுகவினர். அவர்களில் ஒருவரான அதிமுக எம்எல்ஏ விஷ்ணுவின் 11வது அவதாரமே ஜெயலலிதா தான் என்று சொல்வதில் என்ன ஆச்சரியம் இருந்து விடப்போகிறது போங்கள்.