கூவாகம் திருவிழா: தாலி கட்டிக்கொண்ட திருநங்கைகள் - இன்று அரவாண் களப்பலி
விழுப்புரம்: உளுந்தூர்பேட்டையை அடுத்த கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருநங்கைகள் தாலி கட்டிக்கொள்ளும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. கோவில் பூசாரி கையினால் தாலி கட்டிக்கொண்ட திருநங்கைகள் விடிய விடிய கும்மியடித்து நடனமாடினர்.
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகத்தில் கூத்தாண்டவர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்திரை திருவிழா 18 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும். இந்த திருவிழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றம் மற்றும் சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
இதையொட்டி கூத்தாண்டவர் கோயில் அருகில் உள்ள மாரியம்மனுக்கு கூவாகம் கிராம வாசிகள் கூழ் குடங்களை வைத்து கற்பூரம் ஏற்றி வழிபாடு செய்தனர். விழாவை காண தமிழகம் மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான திருநங்கைகள், கடந்த சில தினங்களுக்கு முன்னதாகவே விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, கூவாகம் பகுதிகளில் குவிந்தனர்.
தாலி கட்டிய திருநங்கைகள்
தொடர்ந்து சித்திரை பெருவிழாவின் முக்கிய விழாவான, சுவாமி திருக்கண் திறக்கும் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. தொடர்ந்து திருநங்கைகள் கோயில் பூசாரியின் கையால் தாலி கட்டிக்கொண்டு தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி கூத்தாண்டவரை வழிபட்டனர்.அவர்களோடு வேண்டுதலின்பேரில் ஏராளமான ஆண்களும், பெண்களும், சிறுவர், சிறுமிகளும் தாலி கட்டிக்கொண்டனர்.
விடிய விடிய நடனம்
தாலி கட்டிய பிறகு புதுமணப்பெண்கள் போல் காட்சி அளித்த திருநங்கைகள் கூத்தாண்டவர் கோயில் அருகில் இரவு முழுவதும் விடிய, விடிய நடனமாடியும், கும்மி அடித்தும் கூத்தாண்டவரை தனது கணவராக நினைத்து அவரின் அருமை, பெருமைகள் குறித்து ஆடிப்பாடி உற்சாகமடைந்தனர்.
தேரோட்டம்
விழாவின் 16வது நாள் நிகழ்ச்சியாக இன்று (புதன்கிழமை) அதிகாலை கோவிலில் உள்ள அரவாண் சிரசுக்கு முதல் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. காலை 7 மணியளவில் தேரோட்டம் தொடங்கியது.
அரவாண் களப்பலி
தேர் அழிகளம் புறப்பட்டவுடன் திருநங்கைகள் ஒப்பாரி வைத்து அழுதனர். தேர் மதியம் 1.30 மணிக்கு அழிகளம் எனப்படும் நத்தம் கிராம பந்தலுக்கு வந்தடைந்தது. அங்கு அரவாண் களப்பலி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
விதவைக்கோலம்
அப்போது திருநங்கைகள் தங்கள் தலையில் சூடியிருந்த பூக்களை பிய்த்து எறிந்து, நெற்றியில் உள்ள குங்கும பொட்டை அழித்தனர். வெள்ளை சேலை அணிந்து விதவைக்கோலம் பூண்டு ஒப்பாரி வைத்து அழுதனர். ஆனந்தமாய் தொடங்கிய விழா சோகமயமாக மாறியது. அதே சோகத்துடன் திருநங்கைகள் தங்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.