ஆட்டம்... பாட்டம்... கொண்டாட்டம்... பட்டைய கிளப்பியது கூவாகம் கூத்தாண்டவர் கோயில் திருவிழா!
ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என விழுப்புரம் மாவட்டம், கூவாகத்தில் உள்ள கூத்தாண்டவர் கோயிலில் சித்திரை திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
விழுப்புரம்: ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என விழுப்புரம் மாவட்டம், கூவாகத்தில் உள்ள கூத்தாண்டவர் கோயிலில் சித்திரை திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
ஆணும் இல்லாமல் பெண்ணும் இல்லாமல் அர்த்தநாரியாக பிறப்பவர்களே திருநங்கைகள் என அழைக்கப்படுகின்றனர். இவர்கள் தென்னிந்தியாவில் கேலி பொருளாக ஆக்கப்பட்டாலும், வட இந்தியாவில் இவர்களை சக்தியின் உருவாகவே கருதுகின்றனர்.
திருநங்கைகளின் உணர்வோடு இணைந்த ஒரு சமுதாயச் சடங்காக கொண்டாடப்படுவது தான் கூத்தாண்டவர் திருவிழா. இந்த திருவிழா ஒவ்வோர் ஆண்டும் சித்திரை மாதம் பௌர்ணமி தினத்தன்று கொண்டாடப்படுகிறது.
24-இல் விழா தொடக்கம்
இந்த விழாவானது கடந்த 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆண்டுக்கு ஒருமுறை கொண்டாடப்படும் இத்திருவிழாவில் தமிழகம், ஆந்திரம், கர்நாடகம், தெலங்கானா, சிக்கிம், மிஸோரம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த திருநங்கைகளும், தாய்லாந்து, அமெரிக்கா, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த திருநங்கைகளும் கலந்து கொள்வர்.
15 நாள்கள் கொண்டாட்டம்
15 நாள்கள் கொண்டாடப்படும் இந்த திருவிழாவில் அரவாணிகளுக்கு முக்கிய நாள்களாக வைபவங்களாக கருதப்படுவது தாலி கட்டும் நிகழ்வும், அரவான் களபலி கொடுப்பதும் ஆகும். இதனால் இந்த 2 நாள்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். இவர்களின் கொண்டாட்டத்தை வேடிக்கை பார்ப்பதற்காகவே உள்ளூர் மக்களும் அங்கு திரளுவர்.
மிஸ் கூவாகம்
ஒவ்வோர் ஆண்டும் மிஸ் கூவாகம் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த 1993-ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் இப்போட்டியில் திருநங்கைகளின் நடை, உடை, பாவனை, புத்தி கூர்மை ஆகியவற்றில் சிறந்து விளங்கும் மூன்று பேருக்கு கிரீடங்கள் வழங்கப்படும். விழாவில் கரகாட்டம், பரதநாட்டியம் உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
அரவான் யார்?...
மகாபாரதப் கதையில் அர்ச்சுணனால் கவரப்பட்டு கர்ப்பமாக்கப்பட்ட வேடுவப் பெண்ணான நாகக்கன்னியின் மகன் அரவான். அர்ஜுனனும், கிருஷ்ணரும் தான் மகாபாரத போருக்கு முக்கியமானவர்கள் என்பதால் அரவானைப் பலியாக்க முடிவு செய்து இருவரும் அவனை அணுகுகின்றனர். அரவான் பலிக்கு சம்மதித்தாலும், அவனுக்கான இறுதி ஆசையாக ஒரு பெண்ணுடன் ஒரு நாள் இல்லற வாழ்வை முடித்த பின்பே தான் பலிக்களம் புகுவேன் என சொல்கிறான். வேந்தர் குலம் முதல் வேடுவர் குலம் வரை எந்தப் பெண்ணும் இதை ஏற்க முன்வரவில்லை.
பெண்ணாக மாறும் கிருஷ்ணர்
இறுதியாக ஸ்ரீகிருஷ்ணரே மோகினி அவதாரமெடுத்து அரவானை மணக்கிறார். ஒரு நாள் இல்லற வாழ்விற்குப் பின் பலிக்களம் புகுகிறான் அரவான். விதவைக் கோலம் பூணுகிறாள் மோகினி. இந்த கதையின் அடிப்படையில் மோகினியாய் தம்மை உணரும் அரவாணிகள் கூடி வரும் நிகழ்வாகக் கூவாகம் கூத்தாண்டவர் திருவிழா உள்ளது.
நாளை அரவான் களப்பலி
ஐதீகப்படி நாளை அரவான் களப்பலி நடப்பதால் தற்போது திருநங்கைகள் பூசாரி கையால் தாலி கட்டும் வைபவங்கள் நடைபெற்றன. இதன் பின்னர் விடிய விடிய திருநங்கைகள் ஆடி பாடி கொண்டாடுவர். நாளை அரவான் பலி கொடுக்கப்படுவதால் கணவர் இறந்த பெண்ணுக்கு செய்யும் அத்துனை சடங்குகளும் இவர்களுக்கு செய்யப்பட்டு தாலிகள் அகற்றப்படும். பின்னர் ஒப்பாரி வைத்து மார்பில் அடித்து கொண்டு அழுது பின்னர் வெள்ளை நிற சேலையில் சொந்த ஊருக்கு திரும்புவர்.