கூவத்தூர் பேரம்... நாடு முழுக்க இதேதான் பேச்சு... சமூக வலைத் தளங்களில் ட்ரெண்டிங்!
சென்னை: கூவத்தூர் கூத்துகள் ஒவ்வொன்றாக வெளியில் வர ஆரம்பித்துள்ளன. இன்றைக்கு நாடு முழுவதும் பேசப்படும் விஷயமாக மாறிவிட்டது இந்த கூவத்தூர் கூத்து.
கூவத்துாரில் விடுதியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.க்களுக்கு சசிகலா தரப்பிலிருந்து ரூ.10 கோடி தரப்பட்டதாகவும், மேலும் சிலருக்கு ரூ 6 கோடி ப்ளஸ் தங்கம் கொடுக்க பேரம் பேசியதாகவும் நேற்று வெளியான வீடியோ ஆதாரம் நாட்டையே அதிர வைத்துள்ளது.
#MLAsForSale
இந்த வீடியோ வெளியானதிலிருந்து #MLAsForSale எனும் ஹேஷ்டாக் இந்திய அளவில் நேற்றும் இன்றும் ட்ரெண்டிங்கில் உள்ளது. அனைத்து ஊடகங்களிலும் பிரதான செய்தி இதுதான்.
கூவத்தூர்
ஜெயலலிதா மறைவுக்கு பின், முதல்வரான ஓபிஎஸ், தன் முதல்வர் பதவியை சசி அன்ட் கோ பறித்ததும், போர்க்கொடி தூக்கினார். எம்.எல்.ஏ.,க்கள், பன்னீர் பக்கம் செல்வதை தடுக்க, சசிகலா குடும்பத்தினர், கூவத்துாரில் தனியார் சொகுசு விடுதியில் தங்க வைத்தனர். அவர்கள் தங்கியிருந்த நாட்களில் நடந்த கூத்தெல்லாம் பெரிய கதைகளாக தொலைக்காட்சிகளில் செய்திகளாக வந்தன.
மது மாது...
எம்எல்ஏ நடிகர் ஒருவர் ஏற்பாட்டில் ஏராளமான துணை நடிகைகள் வரவழைக்கப்பட்டு கவர்ச்சி நடனம் நடத்தப்பட்டதாகவும், அதற்கு பணம் செட்டில் பண்ணாததால், அவர்கள் நடிகர் சங்கத்தில் முறையிட்டதும் நடந்தது.
பண பேரம்
அணி மாறாமல் இருக்க ஒவ்வொரு எம்எல்ஏக்கள் தலைக்கும் ரூ 6 கோடி தர சசிகலா குடும்பத்தினர் பேசியிருக்கிறார்கள். அதுமட்டுமின்றி குறிப்பிட்ட அளவு தங்கமாகத் தரவும் டீல் பேசியுள்ளனர்.
உளறிய எம்எல்ஏ
அ.தி.மு.க., - மதுரை வடக்கு, எம்.எல்.ஏ., சரவணன் இதுபற்றி கூறும் வீடியோ காட்சிகள், தனியார் தொலைக்காட்சியில் நேற்று மாலை ஒளிபரப்பாக, அது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்ட அந்த வீடியோ வைரலாகி, இன்றும் #MLAsForSale ஹேஷ் டேக் ட்ரெண்டிங்கில் உள்ளது.