கூவத்தூர் பேரம்.. சிபிஐ விசாரணை கோரிய ஸ்டாலின் மனு ஹைோர்ட்டில் தள்ளுபடி!
கூவத்தூரில் பேர விவகாரம் தொடர்பாக சிபிஐ மற்றும் வருமான வரி புலனாய்வு துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் திமுக செயல்தலைவர் ஸ்டாலினின் மனு நிராகரிக்கப்பட்டது.
சென்னை: கூவத்தூரில் எம்எல்ஏ-க்கள் பேர விவகாரம் தொடர்பாக திமுக செயல்தலைவர் முக ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
டைம்ஸ் நவ்- மூன் டிவி ஆகிய இணைந்து அதிமுக எம்எல்ஏ-க்கள் சரவணன், கனகராஜ் ஆகியோர் மீது ஸ்டிங் ஆபரேஷன் நடத்தியது. அதில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னர் கூவத்தூரில் தங்கவைக்கப்பட்ட 122 எம்எல்ஏ-க்களுக்கு கோடிக்கணக்கில் லஞ்சம் வழங்கப்பட்டதாக அவர்கள் பேசியிருந்தனர்.
இதுகுறித்து சட்டசபையில் விவாதிக்க மு.க ஸ்டாலின் கோரினார். எனினும் சபாநாயகர் அனுமதிக்கவில்லை. இதைத் தொடர்ந்து எம்எல்ஏக்களுக்கு பேரம் பேசப்பட்ட விவகாரத்தை சிபிஐ அல்லது வருவாய் புலனாய்வு துறையினரை கொண்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்தது.
இந்த மனுவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த 22-ஆம் தேதி பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் சட்டசபை சார்ந்த விஷயம் என்பதால் சிபிஐ, வருவாய் துறையினர் விசாரிக்க முடியாது. எதிர்க்கட்சித் தலைவர் தாக்கல் செய்த மனு விசாரிக்க தகுந்தது அல்ல என்பதால் அதை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் முதல்வர் கோரியிருந்தது.
இதேபோல் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று முக ஸ்டாலின் பதில் மனு தாக்கல் செய்தார். இந்நிலையில் இந்த வழக்கானது இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது கிலோ கணக்கில் தங்கம் கொடுக்கப்பட்டது குறித்து சிபிஐ, வருமான புலனாய்வு துறை விசாரணை கோரிய நிலையில், வருமான புலனாய்வு துறை அதிகாரி விளக்கம் அளித்தார். அதில் கடத்தல் தங்கமாக இருந்தால் மட்டுமே அவ்வாறு விசாரிக்க முடியும் என்று தெரிவித்தார்.
இதை கேட்ட நீதிமன்றம், கூவத்தூர் பேரம் தொடர்பாக வருவாய் புலனாய்வு துறையின் விளக்கத்தை கருத்தில் கொண்டு முக ஸ்டாலின் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. மேலும் கூவத்தூர் பேரம் தொடர்பாக விசாரணைக்கு சிபிஐ, வருமான வரித்துறையினரை ஸ்டாலின் நேரடியாக அணுகலாம் என்று உத்தரவிட்டது. நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பான மூல வழக்கானது வரும் 11-ஆம் தேதியில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.