இன்னொருவருடன் ஓடிய கள்ளக்காதலி.. கோபத்தில் தோழியை வெட்டிக் கொன்ற இரும்புக்கடை தொழிலாளி!
சென்னை: சென்னையில் திமுகவைச் சேர்ந்த பெண் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தில் கள்ளக்காதல் விவகாரம் மறைந்திருப்பது தெரிய வந்துள்ளது. தனது கள்ளக்காதலி தன்னை விட்டு விட்டு இன்னொருவருடன் ஓடியதால் ஆத்திரமடைந்த இரும்புக் கடை தொழிலாளி, அப்பெண்ணின் நெருங்கிய தோழியான இந்த திமுக பெண்ணைக் கொலை செய்தது தெரிய வந்துள்ளது.
சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்தவர் லட்சுமி. 47 வயதான இவரது கணவர் பெயர் சேகர். அவர் இறந்து விட்டார். தனது தாயார் சகுந்தலாவுடன் வசித்து வந்தார். இருவரும் பூ விற்று வந்தனர். லட்சுமி திமுகவிலும் இருந்து வந்தார். கூடவே வட்டிக்கும் விட்டு வந்தார்.
புது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் மேகலா. இவர் லட்சுமியின் நெருங்கிய தோழி. மேகலா திருமணமானவர். ஆனால் கணேசன் என்பவருடன் கள்ளக்காதல் வைத்திருந்தார். கணேசன் ராஜபாளையத்தைச் சேர்ந்தவர். இரும்புக் கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். மேகலாவிடம் மயங்கிக் கிடந்த கணேசன் தான் சம்பாதித்த பணத்தையெல்லாம் மேகலாவிடமே கொடுப்பாராம்.
இந்த நிலையில் மேகலா திடீரென கணேசனை கழற்றி விட்டு விட்டு இன்னொருவரைப் பிடித்து விட்டார். அவருடன் சில நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டும் போய் விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த கணேசன், லட்சுமியிடம் போய் நியாயம் கேட்டுள்ளார். மேகலா ஓடிப் போவது குறித்து உங்களுக்குத் தெரிந்தும் என்னிடம் ஏன் சொல்லவில்லை என்று கேட்டுள்ளார். அதற்கு நான் என்ன செய்வது என்று லட்சுமி கேட்டுள்ளார். இதுதொடர்பாக அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில்தான் லட்சுமியை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார் கணேசன். இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். கொலை செய்த பின்னர் தலைமறைவாகி விட்டார் கணேசன். லட்சுமி வீட்டில் அவரது செல்போன் கீழே விழுந்து விட்டது. அதை வைத்துத்தான் கணேசனை போலீஸார் கண்டுபிடித்தனர். தற்போது கணேசன் கைது செய்யப்பட்டுள்ளார். மேகலாவைப் போலீஸார் தேடி வருகின்றனர்.