உடுமலை சங்கர் ஆணவக்கொலை - நீதிக்காக கடைசி வரை உறுதியாக போராடிய கவுசல்யா
கணவனை வெட்டிக்கொன்றவர்கள் பெற்றோர்கள் என்று தெரிந்தும் தண்டனை கிடைக்க வேண்டும் என்று கடைசி வரை உறுதியாக போராடியுள்ளார் கவுசல்யா.
Recommended Video
திருப்பூர்: சாதிமாறி திருமணம் செய்த, தலித் இளைஞர் சங்கர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் இன்று திருப்பூர் நீதிமன்றம் கவுசல்யாவின் தந்தை சின்னசாமி உட்பட 6 பேருக்கு இரட்டை தூக்கு தண்டனை விதித்துள்ளது. கணவனைக் கொன்றவர்கள் பெற்றோர்கள் என்று தெரிந்தும் கடைசி வரை போராடியுள்ளார் கவுசல்யா.
நாட்டையே உலுக்கிய உடுமலை சங்கர் ஆணவக் கொலை வழக்கில் கவுசல்யாவின் தந்தை உட்பட 6 பேருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சின்னசாமி, ஜெகதீஷ், மணிகண்டன், செல்வக்குமார், கலை தமிழ்வாணன், மைக்கேல் (எ) மதன் ஆகியோருக்கு நீதிபதி தூக்கு தண்டனை விதித்துள்ளார்.
கவுசல்யா தந்தை சின்னசாமிக்கு மரண தண்டனை மற்றும் 10 ஆண்டு கடுங்காவல், ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கவுசல்யாவின் தாய் அன்னலட்சுமி, மாமா பாண்டித்துரை மற்றும் பிரசன்னா ஆகியோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கவுசல்யா தந்தை சின்னசாமியை தவிர மற்ற அனைவரும் கூலிப்படையாக செயல்பட்டவர்கள் என்றும் நீதிபதி அலமேலு நடராஜன் தகவல் தெரிவித்துள்ளார்.
சங்கரை காதலித்த கவுசல்யா
திருப்பூர் மாவட்டம் குமரலிங்கத்தைச் சேர்ந்த வேலுச்சாமியின் மகன் சங்கர் பொறியியல் 3ஆம் ஆண்டு படித்து வந்தார். பழனியைச் சேர்ந்த சின்னசாமி மகள் கவுசல்யாவை சங்கர் காதலித்து வந்தார். சங்கர் வேறு ஜாதியைச் சேர்ந்தவர் என்பதால் கவுசல்யா வீட்டில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
சங்கர் வெட்டிக்கொலை
இந்த எதிர்ப்பை பொருட்படுத்தாமல் சங்கரும் கவுசல்யாவும் ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டனர். இதில் ஆத்திரமடைந்த கவுசல்யாவின் பெற்றோர் கூலிப்படையினர் மூலம் இருவரையும் கொல்ல திட்டமிட்டனர்.
கடந்த ஆண்டு மார்ச் 13ஆம் தேதி உடுமலை பேருந்து நிலையம் அருகே மனைவி கவுசல்யாவுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கும்பல் அரிவாளால் சரமாரியாக இருவரையும் வெட்டி சாய்த்து தப்பித்து சென்றது. இந்த வீடியோ காட்சி வெளியாகி தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.
நீதிக்காக போராடிய கவுசல்யா
இந்த தாக்குதலில் சங்கர் மரணமடைந்தார். படுக்காயங்களோடு கவுசல்யா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கணவரை கொன்ற குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கவேண்டும் என்று கவுசல்யா போராடினார். இந்த வழக்கு தொடர்பாக கவுசல்யாவின் தந்தை சின்னசாமி, தாய் அன்னலட்சுமி, கவுசல்யாவின் மாமா பாண்டித்துரை மற்றும் மணிகண்டன், மைக்கேல் (எ) மதன், செல்வக்குமார், ஜெகதீசன், தன்ராஜ், தமிழ் கலைவாணன், பிரசன்னா, எம்.மணிகண்டன் ஆகிய 11 பேரைக் போலீசார் கைது செய்தனர்.
8 பேர் குற்றவாளி
சங்கர் கொலை வழக்கு, திருப்பூர் வன்கொடுமைத் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக விசாரிக்கப்பட்டுவந்த நிலையில், ஏற்கனவே இருதரப்பு வாதங்கள் நிறைவு பெற்றன. இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு வெளியானது. 8 பேர் குற்றவாளி என்று தீர்ப்பளித்த உடனேயே பரபரப்பு பற்றிக்கொண்டது.
இரட்டை மரண தண்டனை
தண்டனை குறித்து குற்றவாளிகளிடம் நீதிபதி முதலில் கருத்து கேட்டிருந்தார். குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என குற்றவாளிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. குற்றவாளிகளுக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்க கூடாது என அரசு தரப்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட பிறகு தண்டனையை குறைத்து வழங்க முடியாது என நீதிபதி கூறியிருந்தார். கவுசல்யா தந்தை உட்பட 6 பேருக்கு தூக்குத் தண்டனை விதித்தார்.
|
இரட்டை ஆயுள் தண்டனை
உடுமலை சங்கர் கொலை வழக்கில் ஸ்டீபன் தன்ராஜூக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்த 11-வது குற்றவாளியான மணிகண்டனுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கணவரை கொன்றவர்கள் பெற்றோர்கள், உறவினர்கள் என்று தெரிந்தும் கடைசி வரை போராடி வெற்றி பெற்றுள்ளார் கவுசல்யா.