கவுசல்யா கணவரை கொலை செய்த 6 பேருக்கு தூக்கு.. நீதியைத் தூக்கி நிறுத்திய கோர்ட்!
உடுமலைப்பேட்டையில் சங்கரை ஆணவக்கொலை செய்த வழக்கில் ஆறு பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
திருப்பூர்: கண் முன்னே துள்ளத் துடிக்க ரத்த வெள்ளத்தில் இளம் கணவனை பறிகொடுத்த இளம்பெண் கவுசல்யாவிற்கு திருப்பூர் நீதிமன்றத்தில் நீதி கிடைத்துள்ளது. 8 பேர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்த நீதிபதி 6 பேருக்கு தூக்கு தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டதால் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் தலித் இளைஞர் சங்கர் படு கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது மனைவி கவுசல்யாவின் தாய், தந்தை உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
உடுமலை அருகே குமரலிங்கத்தைச் சேர்ந்தவர் சங்கர்,22. தனியார் பொறியியல் கல்லூரியில் பி.இ. படித்து வந்த இவர், தன்னுடன் பயின்ற திண்டுக்கல் மாவட்டம், பழநியைச் சேர்ந்த சின்னச்சாமியின் மகள் கவுசல்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
ரத்த வெள்ளத்தில் மரணம்
ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டதால், கடந்த ஆண்டு மார்ச் 13ம் தேதி உடுமலை பேருந்து நிலையம் அருகே ஒரு கும்பல் இருவரையும் சராமாரியாக வெட்டியது. சிகிச்சை பலனின்றி சங்கர் மரணமடைந்தார். கவுசல்யா படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வந்தார்.
சிசிடிவியில் பதிவான காட்சிகள்
இந்த சம்பவம் தொடர்பான சி.சி.டி.வி வீடியோ காட்சிகள் ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அரசியல் தலைவர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் இந்த படுகொலை சம்பவத்திற்கு கடும் கண்டனங்களை பதிவு செய்தனர்.
சங்கர் கொலையில் 11 பேர் கைது
கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கவுசல்யா, தனது அம்மா, அப்பா மற்றும் மாமாக்கள் இணைந்து இந்த சம்பவத்தை அரங்கேற்றி இருப்பதாக வெளிப்படையாகவே குற்றஞ்சாட்டினர். ஆணவக்கொலை தொடர்பாக, கவுசல்யாவின் தந்தை சின்னச் சாமி, தாயார் அன்னலட்சுமி, செல்வக்குமார், மைக்கேல், பால கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த ஜெகதீசன், பழநியைச் சேர்ந்த மணிகண்டன், கலை தமிழ்வாணன், பட்டி வீரன்பட்டியைச் சேர்ந்த மணி கண்டன், பாண்டித்துரை, தன்ராஜ் மற்றும் ஒரு கல்லூரி மாணவர் என 11 பேர் கோவை சிறையில் அடைக்கப்பட்டனர்.
தீர்ப்பு சொன்ன திருப்பூர் கோர்ட்
இந்த வழக்கு தற்போது திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றதில் நடந்து வந்தது. ஒரு ஆண்டுக்கும் மேலாக நடந்த இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கிறது திருப்பூர் நீதிமன்றம். ஆணவக்கொலை தொடர்பாக, கவுசல்யாவின் தந்தை சின்னச் சாமி, தாயார் அன்னலட்சுமி, செல்வக்குமார், மைக்கேல், பால கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த ஜெகதீசன், பழநியைச் சேர்ந்த மணிகண்டன், கலை தமிழ்வாணன், பட்டி வீரன்பட்டியைச் சேர்ந்த மணி கண்டன், பாண்டித்துரை, தன்ராஜ் உட்பட அனைவருக்கும் தண்டனை கிடைக்க வேண்டும் என்றே பலரும் வேண்டிக்கொள்கின்றனர்.
பரபரப்பு தீர்ப்பு
கவுசல்யாவின் தாய் அன்னலட்சுமி, தாய்மாமன் பாண்டித்துரை, பிரசன்னா ஆகியோர் தவிர 8 பேரும் குற்றவாளிகள் என நீதிபதி அலமேலு தீர்ப்பளித்தார். ஒன்றரை ஆண்டுகள் நடந்த இந்த வழக்கில் திருப்பூர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. உணர்ச்சி வேகத்தில் செய்த கொலை என்பதால் குறைந்த பட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று குற்றவாளிகள் வாதிட்டனர். ஆனால் அதிகபட்ச தண்டனை அளிக்க வேண்டும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டது.
தூக்கு தண்டனை
கவுசல்யாவின் தாய் அன்னலட்சுமி, தாய்மாமன், பிரச்சன்னா மூவரும் விடுதலை செய்யப்பட்டனர். கவுசல்யாவின் தந்தை சின்னச்சாமி, கூலிப்படை தலைவன் உள்பட 6 பேருக்கு தூக்கு தண்டனை அறிவிக்கப்பட்டது. கவுசல்யாவின் தந்தை சின்னச்சாமி, ஜெகதீசன், மணிகண்டன், செல்வகுமார், கலை, தமிழ்வானணன், மதன் என்கிற மைக்கேல், ஸ்டீபன், மண்கண்டன் பட்டிவீரன்பட்டியில் அடைக்கலம் கொடுத்தவர் இவர்களுக்கு இபிகோ 120 பி, 147,148 உள்ளிட்ட பிரிவின் கீழ் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது . கடுமையான தண்டனை விதித்துள்ளார் நீதிபதி அலமேலு. கவுசல்யாவிற்கு நீதி கொடுத்துள்ளது திருப்பூர் நீதிமன்றம்.