என் சங்கர் சிந்திய ரத்தத்திற்கு நீதி கிடைத்து விட்டது... அனைவருக்கும் நன்றி - கவுசல்யா
என் கணவர் சிந்திய ரத்தத்திற்கு ஒன்றரை ஆண்டுகளில் நீதி கிடைத்துள்ளது. நீதிமன்றத்தின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது என்று கவுசல்யா கூறியுள்ளார்.
Recommended Video
திருப்பூர்: என் சங்கர் சிந்திய ரத்தத்திற்கு நீதி கிடைத்துள்ளது என்று அவரது மனைவி கவுசல்யா கூறியுள்ளார். தன்னுடன் சட்டப்போராட்டம் நடத்திய அனைவருக்கும் நன்றி கூறியுள்ளார்.
நாட்டையே உலுக்கிய உடுமலை சங்கர் ஆணவக் கொலை வழக்கில் கவுசல்யா தந்தை உட்பட 6 பேருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சின்னசாமி, ஜெகதீஷ், மணிகண்டன், செல்வக்குமார், கலை தமிழ்வாணன், மைக்கேல் (எ) மதன் ஆகியோருக்கு நீதிபதி தூக்கு தண்டனை விதித்துள்ளார்.
கவுசல்யாவின் தாய் அன்னலட்சுமி, மாமா பாண்டித்துரை மற்றும் பிரசன்னா ஆகியோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்த தீர்ப்பு குறித்து உடுமலைப்பேட்டையில் உள்ள கவுசல்யா கருத்து கூறியுள்ளார்.
நீதிக்காக காத்திருந்தேன்
செய்தியாளர்களிடம் அறிக்கை ஒன்றை வாசித்த கவுசல்யா, என் சங்கர் சிந்திய ரத்தத்திற்கு நீதி கிடைத்துள்ளது. ஒன்றரை ஆண்டுகள் காத்திருந்தேன். இந்த தீர்ப்பின் மூலம் நீதித்துறையின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
முன்னுதாரணம்
இந்த குற்றச்செயலில் ஈடுபட்டவர்களுக்கு ஜாமீன் தராமல் நீதிமன்ற காவலிலேயே வைத்திருந்தனர். இது எந்த வழக்கிலும் நடக்காத ஒன்று. தனித்துவமான தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஆணவக்கொலை வழக்கில் முதன் முறையாக பெரும்பான்மையானவர்களுக்கு தூக்கு தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.
காத்திருப்பு வீண் போகவில்லை
தூக்கு தண்டனைக்கு குறித்து என் கருத்து வேறாக இருந்தாலும் சங்கரை கொன்றவர்களுக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டுள்ளதன் மூலம் சாதி வெறியர்களுக்கு இது அச்சத்தை ஏற்படுத்தும். என் காத்திருப்பு வீண் போகவில்லை. என்னுடன் போராடிய அனைவருக்கும் நன்றி. நீதித்துறைக்கும் நன்றி.
சட்டப்போராட்டம்
குற்றவாளிகள் எவ்வகையிலும் தப்பிவிடக்கூடாது என்பதற்காக இரட்டை தூக்கு தண்டனை, இரட்டை ஆயுள் தண்டனை அளித்துள்ளனர். எல்லா வகையிலும் இந்த தீர்ப்பை வரவேற்கிறேன். குற்றத்திற்கு உடந்தையாக இருந்த அன்னலட்சுமி, பாண்டித்துரைபிரசன்னாவின் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்வேன். அவர்களுக்கும் தண்டனை கிடைக்கும் வரை போராடுவேன். இறுதிவரை என் போராட்டம் ஓயாது. எனக்கும் என் கணவர் சங்கரின் குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் கவுசல்யா கேட்டுக்கொண்டுள்ளார்.