ஜாதி மறுத்து திருமணம் செய்த கணவனுக்காக போராளியாக மாறிய 'கவுசல்யா'
சாதி மறுப்பு திருமணங்கள் என்பது எதிர்காலத்தில் சாத்தியமா என்ற கேள்விக்கு மன உறுதி இருந்தால் நிச்சயம் சாத்தியம் தான்; சாதி என்ற ஒன்றை வேறோடு அழித்து விடலாம் என்பதற்கு சான்றாக இருக்கிறார் கவுசல்யா. சென
Recommended Video
சென்னை : இரண்டு வெவ்வேறு சாதியைச் சேர்ந்த ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொண்டால் அதனை ஏற்க மறுக்கும் சமூகத்திற்கு துணிவோடு எதிர்த்து நின்று போராடும் துணிச்சல்மிக்கவராக திகழ்கிறார் கவுசல்யா. கவுசல்யாவின் துணிச்சல் சாதி மறுப்பு திருமணம் செய்யும் எதிர்காலத்தினருக்கும் இருந்தால் சாதி என்ற பாகுபாடே இல்லாத ஒரு உலகை உருவாக்க முடியும்.
கல்லூரி காலத்தில் காதல், திருமணம் என்பது சகஜமான ஒன்று தான். அப்படி நினைத்துத் தான் பழநியைச் சேர்ந்த கவுசல்யாவும், உடுமலைப்பேட்டையை சேர்ந்த சங்கரும் காதலித்து பெற்றோர் எதிர்த்ததால் பழநி கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். தலித் இளைஞரை திருமணம் செய்தார் என்ற ஒரே காரணத்திற்காக மகள் என்றும் பாராமல் கவுசல்யாவையும், சங்கரையும் கொல்ல கூலிப்படையை ஏவினார் கவுசல்யாவின் தந்தை சின்னசாமி.
8 மாத திருமண வாழ்க்கை கூலிப்படையின் எட்டே நிமிட அரிவாள் வெட்டில் முடிந்து போனது கவுசல்யாவிற்கு. புதுமண தம்பதிகள் வெளியே சென்றிருந்த சமயத்தில் உடுமலை சாலையோரத்தில் நின்றுகொண்டிருந்த போது கூலிப்படையினரின் சரமாரி அரிவாள் வெட்டிற்கு ஆளானார்கள். தன் கண் முன்னே கணவன் துடிதுடிக்க வெட்டப்படுவதை தடுக்க சென்ற கவுசல்யாவிற்கும் வெட்டுக்கள் விழுந்தன.
கவுசல்யாவை நடுங்க வைத்த கொலை
ஈரக்குலை நடுங்க வைக்கும் இந்த காட்சிகளை சிசிடிவி காட்சிகளாகப் பார்க்கும் போதே நமக்கு பதற்றம் வருகிறது. ஆனால் கவுசல்யா இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர். அவருக்கு அந்த சம்பவம் எத்தனை இரவுகளை துக்கமானதாக்கி இருக்கும். கணவனை கண் முன்னே துடிக்க முடிக்க வெட்டிக் கொன்ற அந்தத் தருணம் அவரால் வாழ்நாளிலும் மறக்க முடியுமா.
நியாயத்திற்காக போராடிய கவுசல்யா
வேறொரு பெண் என்றால் இந்த சம்பவத்திற்குப் பிறகு ஒன்று தவறான முடிவை எடுத்திருப்பார் அல்லது மன நிலை பாதிக்கப்பட்டிருப்பார். ஆனால் சங்கரின் கொலைக்கு நீதி கேட்டு நீதிமன்றப் படியேறினார் கவுசல்யா. சாதாரண பெண்ணாக இருந்த கவுசல்யா, சங்கர் கொலைக்குப் பிறகு தன்னையே மாற்றிக் கொண்டார்.
சங்கர் குடும்பத்துடனேயே
இந்த சாதி வெறி பிடித்த சமூகத்திற்கு எதிராக பாடம் புகட்டும் சக்தியாக தன்னை ஒன்றரை ஆண்டுகளாக மாற்றிக் கொண்டுள்ளார் கவுசல்யா. கணவனின் குடும்பத்தாருடனே இருந்து கொண்டு அவர்களுக்கு முடிந்த உதவியை செய்து கொடுத்து சங்கர் இடத்தில் இருந்து அவர்களை கவனித்துக் கொள்கிறார்.
துணிச்சல்காரி கவுசல்யா
மனதளவிலும், உடல் அளவிலும் தன்னை வலிமை மிக்க துணிச்சல்மிக்கவராக மாற்றிக் கொண்ட கவுசல்யாவின் மனதுணிவு தான் சங்கர் கொலையில் தன்னுடைய பெற்றோர் என்றும் பாராமல் நீதிக்காகப் போராடி இருப்பதன் மூலம் தெரிகிறது. காதல் என்பது வயசுக் கோளாறு என்று தட்டிக்கழிக்கும் பெற்றோருக்கும், சாதி மதத்தில் ஊறித் திளைத்திருப்பவர்களுக்கும் கவுசல்யா ஒரு நிகழ்காலப் போராளி.
சாதிகள் இல்லாத சமூகம் மலரட்டும்
கவுசல்யா போன்ற மன உறுதி இருந்தால் போதும் எதிர்காலத்தில் சாதி மறுப்புத் திருமணங்கள் சாத்தியமே. எந்த பிரச்னை வந்தாலும் எடுத்த முடிவில் துணிவுடன் இருக்க வேண்டும். சாதி மறுப்புத் திருமணம் செய்ததால் நடந்த ஆணவக்கொலைக்கு சரியான தீர்ப்பை அளித்துள்ள நீதிபதி அலமேலு நடராஜனின் பங்கும் இதில் முக்கியத்துவம் வாய்ந்தது. இனியாவது ஆணவக்கொலை செய்ய துணியும் சாதி வெறியர்கள் சட்டத்தை கண்டு அஞ்சுவார்கள் என்று நம்புவோம். சாதிகள் இல்லாத எதிர்காலம் மலரவும், காதல் திருமண ஊக்குவிப்புகளுக்கு சங்கரின் கொலை வழக்கின் தீர்ப்பு முன் உதாரணமாக இருக்கட்டும்.