கோவை பாரதியார் பல்கலை. துணைவேந்தர் கணபதியின் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கணபதியின் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி செய்யப்பட்டது.
கோவை: கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கணபதியின் ஜாமீன் மனு 2-ஆவது முறையாக தள்ளுபடி செய்யப்பட்டது.
பேராசிரியர் நியமனத்துக்கு துணைவேந்தர் கணபதி, ரூ.30 லட்சம் லஞ்சமாக கேட்டதாக சுரேஷ் என்பவர் கடந்த 10 தினங்களுக்கு முன் லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் அளித்தார். அதன் பேரில் அதிகாரிகள் துணை வேந்தர் கணபதியை கண்காணித்து வந்தனர்.
கடந்த 3 -ஆம் தேதி சுரேஷிடம் இருந்து கணபதி ரூ. 1 லட்சம் ரொக்கம் மற்றும் மீதம் 29 லட்சம் ரூபாய் காசோலையையும் பெற்றபோது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளிடம் கையும் களவுமாக பிடிபட்டார்.
இதையடுத்து அவரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர். இதையடுத்து அவரை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இதேபோல் லஞ்சம் வாங்குவதில் அவருக்கு உறுதுணையாக இருந்ததாக பேராசிரியர் தர்மராஜும் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் கடந்த 9-ஆம் தேதி இருவரும் கோவை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி விண்ணப்பித்திருந்தனர். அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
இதைத் தொடர்ந்து இன்று அதே நீதிமன்றத்தில் இருவரும் மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்தனர். 2-ஆவது முறையாக அவர்களது மனு தள்ளுபடி செய்யப்பட்டது.