இயற்கை எழில் கொஞ்சும் கோவை குற்றாலம் அருவி.. குவியும் சுற்றுலா பயணிகள்
கோவை: இயற்கை எழில் கொஞ்சும் கோவை குற்றாலம் அருவியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.
அடர்ந்த வன பகுதிக்குள் குளிர்ந்த சீதோஷ்ண நிலையில் காணப்படும் கோவையில் உள்ள கோவை குற்றாலம் அருவி தமிழகத்தில், சிறந்த சுற்றுலா தளமாக உள்ளது.
கோவை குற்றாலம் சிறுவாணி நதியில் அமைந்துள்ள ஓர் அருவியாகும். கோவையில் இருந்து 36 கிமீ தொலைவில் அடர்ந்த கானகத்தில் அமைந்துள்ளது. இயற்கை எழிலுக்கும் தெளிவான நீரோட்டத்திற்கும் புகழ் பெற்றது. பாதுகாக்கப்பட்ட கானகப்பகுதியில் அமைந்துள்ளதால் மாலை 3 மணிக்குப் பிறகு பயணிகளுக்கு அனுமதி கிடையாது.
வெயில் காலங்களில் இப்பகுதி நல்ல குளிர்ச்சியான காற்றையும், குளிர்ந்த நீரையும் தருவதால் பொதுமக்கள் சுற்றுலா மேற்கொள்ள ஏற்றதாக விளங்குகிறது. இங்கு மலையில் மிக உயரத்திலிருந்து அதிக அழுத்தத்துடன் நீர் விழுவதால் மக்கள் இங்கு அதிக கவனமுடன் குளிக்க வேண்டியுள்ளது. இந்த அருவி சிறுவாணி ஆற்றிலிருந்து பிறக்கிறது. இங்கே பலவகையான பறவைகளையும் விலங்குகளையும் ஒருங்கே காண முடியும். இப்பகுதியில் குரங்குகள் நிறைந்து காணப்படுகின்றன.
பிரபலமான மர வீடுகள்
மிகவும் அடர்ந்த காடுகளுக்கு நடுவே இந்த அருவி அமைந்து உள்ளது. இதனால் தண்ணீரின் சுவை மிகவும் அருமையாக இருக்கும். அருவியில் தங்குவதற்காக வனத் துறை சார்பில் வீடுகள் கட்டப்பட்டு உள்ளது . இங்கு உள்ள மர வீடுகள் மிகவும் பிரபலமானது. இரவு நேரங்களில் இங்கு தங்கி வனத்தின் சூழலை நம்மால் உணரும் வகையில் அமைத்து உள்ளனர். வன விலங்குகளை நாம் வீட்டில் மேலே இருந்து ரசிக்கலாம். ஒரு வீட்டிற்கு ஒரு நாள் தங்குவதற்கு 2 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படுகிறது. தங்குவதற்கு தேவையான அனைத்து வசதிகளும் அறையில் வைக்கப்பட்டு உள்ளது. வனத் துறை அலுவலத்தில் இதற்கான முன் பதிவு செய்ய வேண்டும். மேலும் விரைவில் ஆன்லைன் மூலமாக பதிவு செய்யும் வசதியை கொண்டு வர உள்ளனர்.
பயண விபரங்கள்
பல்வேறு மாநிலங்களில் இருந்து விமானத்தில் வரும் மக்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்து அங்கு இருந்து கோவை குற்றாலத்திற்கு பயணிக்கலாம். பேருந்துகளில் வரும் மக்கள், கோவையில் உள்ள காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து சாடிவயல் வரை அரசு பேருந்து செல்கிறது. சரியாக ஒன்றே கால் மணி நேரம் வரை பேருந்தில் பயணிக்க வேண்டும், இரு சக்கர அல்லது நான்கு சக்கர வாகனத்தில் பயணித்தால் நாற்பது நிமிடங்களில் பயணிக்கலாம். அங்கே இறங்கியவுடன் கோவை குற்றாலத்தின் சோதனை சாவடியில் , பெரியவர்களுக்கு 50 ரூபாயும், சிறியவர்களுக்கு 20 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. மேலும் வாகனங்கள் நிறுத்த தனியாக வசூலிக்கபடுகிறது. காலை பத்து மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.
பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை
நுழைவு கட்டணத்தை பெற்ற பிறகு குற்றால அருவிக்கு செல்ல உள்ள பாதை முழுவதும் அடர்ந்த காடுகளாக உள்ளதால் வனத் துறை சார்பில் உள்ள பேருந்து மூலமாகவே அனைவரும் அழைத்து செல்லப்படுவர். அங்கு அனைவரும் வாகனம் நிறுத்தி விட்டு அருவிக்கு செல்ல வேண்டும் . பின்னர் அருவியிக்கு முன்பே 750 மீட்டர் தொலைவில் இறக்கி விடப்படுவார்கள் பின்னர் அங்கு இருந்து சிறிது நேரம் நடந்து செல்ல வேண்டும். அருவிக்கு செல்லும் முன்பே அனைவரும் பரிசோதிக்கப்படுகின்றனர். இங்கு பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு செல்ல முற்றிலும் தடை செய்யப்பட்டு உள்ளது.
தேவையான அடிப்படை வசதிகள்
அருவிக்கும் முன்பே குடிப்பதற்கு தேவையான தண்ணீர் மற்றும் உடை மாற்றும் அறை, கழிப்பறை வசதி என அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தந்து உள்ளனர். அனைத்து திங்கள் கிழமைகளிலும் கோவை குற்றாலம் அருவிக்கு விடுமுறை விடப்படுகிறது. இரண்டு பெரியவர்கள் மற்றும் இரண்டு சிறியவர்கள் கொண்ட ஒரு குடும்பத்திற்கு கோவை குற்றாலம் அருவிக்கு பேருந்து மூலமாக வர மொத்தம் 300 ரூபாய் செலவாகிறது. கோவை குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் , அருவிக்கு அருகே உள்ள ஈஷா யோகா மையத்தில் உள்ள ஆதியோகி சிலையை கண்டும் மகிழலாம்.