இப்பவே கண்ணை கட்டுதே.. மிரள வைக்கும் 65 அடி உயர கோவை செங்குத்து மேம்பாலம்.. பீதியில் மக்கள்
காந்திபுரம் மேம்பாலம் செங்குத்தாக இருப்பதால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
கோவை: கோவை காந்திபுரம் பகுதியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலம் செங்குத்தாக இருப்பதால் அந்த மேம்பாலத்தை கட்டுவதை பார்க்கும்பொழுதே பொதுமக்கள் அச்சத்தில் உறைந்து உள்ளனர்.
கோவை காந்திபுரம் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க கடந்த 2014-ஆம் ஆண்டு 160 கோடி ரூபாயில் இரட்டை அடுக்கு பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டு, கட்டுமானப் பணிகள் துவங்கியது.
வெறிச்சோடிய மேம்பாலம்
இந்நிலையில் முதல் அடுக்கான நஞ்சுசப்பா சாலையில் இருந்து சத்தி ரோடு ஆம்னி பேருந்து நிலையம் வரை மேம்பாலம் கட்டும் பணி முடிவடைந்து கடந்த சில நாட்களுக்கு முன் மேம்பாலம் திறந்து வைக்கப்பட்டது. பொதுமக்கள் அதிகம் பயன்படுத்த கூடிய இடங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் மேம்பாலத்திற்கு அடியில் இருக்கும் சூழலில், மேலப்பாலத்தை பயன்படுத்தும் மக்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது. இதனால் மேம்பாலத்தில் போக்குவரத்து என்பது எப்பொழுதும் வெறிச்சோடி காணப்படுகிறது.
மேம்பாலத்தின் 2-ம் அடுக்கு
மேம்பாலம் கட்டப்பட்டுள்ள இடைப்பட்ட இடங்களில் வெளியூர் செல்ல கூடிய பேருந்து நிலையம், உள்ளூர் பேருந்து நிலையம் அமைந்துள்ளது. இதனால் மேம்பாலம் கட்டப்பட்டும் காந்திபுரம் பகுதியில் சற்றும் கூட போக்குவரத்து நெரிசல் என்பது குறையாமலேயே உள்ளது. இந்த மேம்பாலமே தற்போது பயனற்று போய் உள்ள நிலையில், இதே போல மேம்பாலத்தின் இரண்டாம் அடுக்கானது நூறடிசாலை 5-வது வீதியில் இருந்து, சின்னசாமி சாலை மின் மயானம் வரை அமைக்க திட்டமிடப்பட்டு கட்டுமானப் பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகிறது.
65 அடி உயர செங்குத்து
இந்த மேம்பாலம் மட்டும் 90 கோடி ரூபாயில் கட்டப்படுகிறது. 65 அடி உயரத்தில் செங்குத்தாக உள்ளது. மிகவும் குறுகலான இந்த பாலம், முதல் அடுக்கு மேல்பாலத்தின் மேல் செல்ல உள்ளது. மிகவும் குறுகலாகவும் உயரமாகவும் உள்ளதால் இந்த பாலத்தில் செல்ல வாகன ஓட்டிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். இந்த மேம்பாலம் ஒரு சூசைடு பாயிண்ட்டை போல உருவாக உள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இப்பவே கண்ணை கட்டுதே
இந்த மேம்பாலத்தில் பேருந்துகள் பயணிக்க முடியாத நிலையில் உள்ளது .இதனால் இந்த மேம்பாலமும் முற்றிலும் பயனற்று போகும் நிலை ஏற்பட்டு உள்ளதாக குற்றச்சாட்டு வைத்து உள்ளனர். இது குறித்து கட்டுமான பொறியாளர்களிடம் கேட்டபோது, அதிக பாரம் கொண்ட வாகனங்கள் இந்த மேம்பாலத்தில் பயணம் செய்தால் விபத்து ஏற்பட நேரிடும் எனவும் எச்சரித்து உள்ளனர். புதிதாக கட்டப்பட்டு வரும் செங்குத்து மேம்பாலத்தை கண்ட வாகன ஓட்டிகள், இப்பவே கண்ணை கட்டுதே, எப்படித்தான் இதில் வண்டிய ஓட்டப்போறோமோ என அச்சத்துடன் தெரிவிக்கின்றனர்.