இந்த ஆலமரத்தடியில்தான் ஆத்தா ஆடு வளர்த்தா .. எங்களையும் வளர்த்தா.. ஒரு மரத்தின் கண்ணீர் கதை
300 ஆண்டு பழமையான ஆலமரத்துக்கு பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
கோவை: ஆலமரம் என்றால் நம் நினைவுகள் வந்து செல்வது ஓங்கிவளர்ந்து தழைத்து தொங்கும் அதன் விழுதுகள். அதையும் தாண்டி நமக்கு நினைவுக்கு வருவது 18 பட்டி பஞ்சாயத்துக்கள் நடக்கும் 'மினி கோர்ட்'. அவ்வளவுதான்
ஆனால் இதையும் தாண்டி உயிரற்ற ஆலமரத்திற்கு உயிருள்ள ஒரு பந்தம் ஏற்பட்டுள்ளன. உறவுகள் பல கிடைத்துள்ளன. ஆம். கோவை தொண்டாமுத்தூரில் உள்ள ஒரு ஆலமரத்தின் கதை இது.
தொண்டாமுத்தூர் இக்கரைபோளுவாம்பட்டி செல்லும் வழியில் உள்ள ஊர் புத்தூர். இங்கு 300 வருட பழமையான ஆலமரம் ஒன்று இருந்தது. இந்த ஆலமரத்தில்தான் எத்தனை எத்தனை சம்பவங்கள் நடந்துள்ளன. தகராறு, சண்டை, கல்யாணம், காதுகுத்து, பஞ்சாயத்து என சகலமும் அந்த ஊருக்கு இநத் ஆலமரத்தடியில்தான் நடந்து வந்திருக்கிறது.
300 ஆண்டு பழமை
காலம் மாற மாற, இந்த ஆலமரத்தின் அடியில் தற்போது பஸ் ஸ்டாப், கடை, மேடை என வந்துவிட்டன. 300 ஆண்டுகாலம் இந்த ஆலமரத்துடன் ஊர் மக்களுக்கு தொடர்பு ஏற்பட்டு கொண்டே வருவதால் இதனை நினைவு சின்னம் என்றே சொல்கின்றனர். அடிக்கடி இந்த ஆலமரத்தின் பெருமைகளை மற்ற ஊர்காரர்களுக்கு சொல்லி பெருமைப்பட்டுக் கொள்வர்.
இயற்கையை வெல்ல முடியுமா?
ஆனால் இந்த உணர்வுகள் எல்லாம் இயற்கைக்கு தெரியுமா? புரியுமா? அல்லது இயற்கைக்குமுன்தான் நாம் சரிக்கு சமம் நிற்க முடியுமா? தென்மேற்கு பருவமழையின் ரூபத்தில் சூறாவளியாய் சுழன்று வந்தது இயற்கை. பலத்த காற்றுக்கு தாக்குப் பிடிக்க முடியாத இந்த ஆலமரம் கடந்த ஞாயிறு இரவு 7 மணிக்கு சாலையில் வேரோடு சாய்ந்து விழுந்தது.
கட்டிக் கொண்டு அழுதனர்
ஆலமரம் விழுந்து விட்டது என்ற தகவல் ஊர்முழுக்க பரவியது. ஊரே ஓடிவந்தது. கீழே விழுந்து கிடந்த மரத்தை கட்டிக் கொண்டு அழுதனர் மக்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையில் ஆலமரம் பல நிகழ்வுகளை தந்ததை நினைத்து நினைத்து கதறினர். குறிப்பாக பெரியவர்களுக்கு இன்னும் ஆலமரம் பற்றிய தொடர்புகளும், சம்பவங்களும் அதிகம் என்பதால் நிலைக்குலைந்து கண்ணீர் வடித்தனர். கீழே சாலையில் விழுந்து கிடப்பதை எடுத்து போடக்கூட மனமின்றி தவித்தனர்.
மரம்போல் ஆன மனிதர்கள்
தற்போது முழுவதுமாக அந்த மரத்தை வெட்டி எடுக்க 2 நாட்கள் ஆகிவிட்டது. ஊர்மக்கள் அதோடு மரத்தை விட்டுவிட்டார்கள் என்று நினைக்கிறீர்களா? அதுதான் இல்லை. தங்கள் தாய் தந்தையர், தாத்தா, பாட்டி, என தங்களது மூதாதையர்களோடு ஒன்றாக சேர்ந்து வாழந்த மரத்திற்கு இறுதி சடங்கு நடத்தி உள்ளனர். அதுமட்டுமா? அந்த மரத்திற்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டினர். அந்த ஊருக்கு தற்செயலாக வந்த வெளியூர் ஆட்கள் இதனை கண்டு உருகி நின்றனர். இந்த மரத்தை பற்றின வரலாறு அவர்களுக்கு முழுமையான தெரியாவிட்டாலும், மக்கள் காட்டும் உணர்வினை கண்டு விக்கித்து போயினர். இப்போது மரம் மாதிரி உறைந்து நின்றது அந்த மனிதர்கள்தான்!