இளம் வயது யோகா ஆசிரியர்.. சர்வதேச அளவில் யோகாவில் கலக்கும் கோவை கல்லூரி மாணவர்
சர்வதேச அளவில் யோகாவில் மாணவர் ஒருவர் சாதித்து வருகிறார்.
Recommended Video
கோவை: சர்வதேச யோகாவில் சாதித்து, சிறு வயதிலேயே யோகா ஆசிரியராகி பல சர்வதேச யோகா போட்டியாளர்களை உருவாக்கி சாதித்து வருகிறார் கோவையை சேர்ந்த ஹரி பிரகாஷ் என்ற மாணவர்.
கோவையை அடுத்த குருடம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஹரி பிரகாஷ் . இவர் பத்மஸ்ரீ விருது பெற்ற யோகா பாட்டியின் பேரனாவார். யோகாவின் மீதான ஆர்வத்தின் காரணமாக சிறு வயதில் இருந்தே யோகாவில் தனது பாட்டியுடன் இணைந்து சாதித்து வருகிறார். அதன்பலன் பல்வேறு சர்வதேச யோகா போட்டியாளர்களை பின்னுக்கு தள்ளி கடந்த மாதம் மலேசியாவில் நடைபெற்ற போட்டியில் தங்கப் பதக்கத்தை பெற்று உள்ளார்.
மரணத்தை தள்ளி போடும் யோகா
"யோகப் பயிற்சியின் மூலம் உடற்தகுதியினை உடல் நலத்தை தக்க வைத்துக்கொள்ளலாம். உடலின் பலவீனமான பகுதிகளை வலுவடைய செய்கிறது. உடல் எடையை சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது. குறிப்பாக மரணத்தை தள்ளிப்போடுகிறது. சர்க்கரை நோய், ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டிற்குள் வைக்க உதவும். ரத்தத்தில் உள்ள கொழுப்பை கரைக்க உதவுகிறது. எனவே அனைவரும் யோகா செய்தால் ஆரோக்கியமான நோயற்ற வாழ்வை வாழ முடியும்" என்கிறார் ஹரி பிரகாஷ்.
மூலிகை சார்ந்த மருந்துகள்
ஹரி பிரகாஷின் வீட்டில் அனைவரும் மூலிகை சார்ந்த மருந்துகளையே உட்கொண்டு வருகின்றனர். இதனால் இவரின் குடும்பத்தில் யாரும் மருத்துவமனைக்கே சென்றதில்லை. சிறியதாக உடல் சோர்வு ஏற்பட்டாலும் மூலிகை சாற்றை கொண்டு அதனை குணப்படுத்துகின்றனர். இதனால் தன்னை போல அனைவரும் ஆரோக்கியமாக இருக்க யோகாவை செய்ய வேண்டும் என பரிந்துரைக்கிறார்.
குருவின் உதவியுடன் யோகா
யோகா ஆசிரியருக்கு படித்து தற்போது கல்லூரி படிப்பு படிக்கும்போதே யோகா ஆசிரியராக உள்ளார் ஹரி . இதனால் இவர் தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு யோகா கற்றுத் தருகிறார். எந்த வித யோகா செய்தாலும் யோகா குருவின் உதவியுடனேயே செய்ய வேண்டும் எனவும் அறிவுரை வழங்குகிறார்.
நோயற்ற வாழ்வு
தனது குடும்பத்தில் யோகா பாட்டியின் பெருமையை தானும் சாதித்து நிலைநிறுத்தி வருகிறார். எனவே ஆரோக்கியமான வாழ்வை பெற அனைவரும் யோகா பயிற்சியை செய்தால் நோயற்ற வாழ்வை பெறலாம் என்று நம்பிக்கையுடன் கூறி முடித்தார் ஹரிபிரகாஷ்.