என்ன அநியாயம் .. ரேஷன் அரிசியை மாவாக்கி கடத்தல் 137 மாவுமூட்டைகள் பறிமுதல்.. மில் ஓனர்களுக்கு வலை
கோவில்பட்டி: கோவில்பட்டியில் இருந்து லாரிகள் மூலம் மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட இருந்த 137 ரேஷன் அரிசி மாவு மூட்டைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
கோவில்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக அரவை மில்களில் ரேஷன் அரிசியை மாவாக மாற்றி பல்வேறு இடங்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், கோவில்பட்டி டி.எஸ்.பி. ஜெபராஜ் தலைமையிலான போலீஸார் விசாரணையில் ஈடுபட்டனர்.
அப்போது, அப்பகுதியிலுள்ள மாவு அரவை மில்லுக்குள் சோதனை நடத்த சென்றர். அப்போது தனியாருக்கு சொந்தமான மில் ஒன்றில், ஊழியர்கள் ரேஷன் அரிசி மாவாக அரைத்து கொண்டிருந்தனர். இதையடுத்து, அதிரடியாக உள்ளே நுழைந்த போலீசார், அரிசி அரைத்துக் கொண்டிருந்தவர்களிடம், விசாரணையை துவங்கினர்.
அதில், வள்ளுவர்நகர் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து, செக்கடித் தெருவில் உள்ள கண்ணன் ஆகியோரின் மில்களில் இவ்வாறு அரவை பணிகள் பல நாட்களாக நடந்து வருவதும், ரேசன் அரிசி மாவு அரைக்கப்பட்டவுடன், லாரி மூலம் மதுரைக்கு கடத்தி செல்லப்படுவதாகவும் தெரியவந்தது.
இதையடுத்து, அங்கிருந்த 137ரேசன் அரிசி மாவு மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவை சுமார் 50 கிலோ கொண்டவை என கூறப்படுகிறது. அரிசி மாவு மூட்டைகளை போலீஸார், கைப்பற்றி உணவு பாதுகாப்பு அலுவலர்களிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் மில் உரிமையாளர்கள் கண்ணன் மற்றும் மாரிமுத்துவை தேடி வருகின்றனர்.