அரசு பள்ளி மாணவர்கள் மீண்டும் மோதல்- 11 பேர் அதிரடி கைது
கோவில்பட்டி: கழுகுமலையில் அரசு மேல்நிலைப்பள்ளியில் நிர்வாகம் எச்சரிக்கையை மீறியும் மாணவர்கள் மோதலில் ஈடுபட்டனர். இதனால் 11 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் கழுகுமலை மற்றும் அதனை சுற்றியுள்ள கரடிகுளம், வேலாயுதபுரம், லட்சுமிபுரம், துலுக்கப்பட்டி, தெற்கு கழுகுமலையை சேர்ந்த சுமார் 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் இரு சமூகத்தை சேர்ந்த மாணவர்களிடையே சாதி மோதல் நடந்து வருகிறது.
கடந்த ஆண்டு நடந்த மாணவர்கள் மோதலில் 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் கடந்த மாதம் புலித்தேவன் பிறந்த நாளை பட்டாசு வெடித்து கொண்டாடிய 10 மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் தலைமையிலான கண்காணிப்பு குழுவினர் விசாரணை நடத்தி சஸ்பெண்ட் செய்தனர். இதை தொடர்ந்து இமானுவேல் சேகரன் பிறந்தநாள் அன்றும் பட்டாசு வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அப்போதைய ஏ.எஸ்.பி முரளி ராம்பா பள்ளிக்கு வந்து மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
மேலும் கடந்த 4 ஆம் தேதி கோவையில் இருந்து வந்த ஆல்பா பிரைன் பவர் ஆகடாமியில் இருந்து வந்த குழுவினர் பள்ளியில் சாதி மோதலில் ஈடுபட கூடாது என மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்தனர்.இந்த நிலையில் மாலையில் பிளஸ்1 வரலாற்று பிரிவு மாணவர் ஒருவர் தனது நண்பர்களுடன் செல்போனில் பாட்டு கேட்டு கொண்டிருந்தார்.
அதை பார்த்த பிளஸ் டூ மாணவர்கள் பள்ளி தலைமை ஆசிரியரிடம் தெரிவித்துள்ளனர். ஆசிரியர் அந்த மாணவரை கண்டித்து செல்போனை பறித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவர் தனது சமூகத்தை சேர்ந்த மாணவர்களிடம் செல்போன் பறிப்பு பற்றி கூறியுள்ளார். ஆத்திரமடைந்த அவர்கள் சம்பந்தப்பட்ட மாணவருடன் பள்ளி வாளத்தில் திரண்டனர்.
அவர்களுக்கும் பிளஸ் டூ மாணவர்களுக்கும் இடையே திடீரென மோதல் வெடித்தது. இதுகுறித்து உடனடியாக கழுகுமலை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த அவர்கள் மாணவர்கள் மோதலை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து தகராறில் ஈடுபட்ட இரு தரப்பை மாணவர்கள் 11 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இது பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.