கோயம்பேடு-ஆலந்தூர் இடையே அக்டோபரிலிருந்து மெட்ரோ ரயில் சேவை துவக்கம்
சென்னை: சென்னையில் கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை அக்டோபர் 2ம் வாரத்தில் பயணிகள் சேவை தொடங்கும் என்று மெட்ரோ வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னையில் இரண்டு வழித்தடங்களில் 45 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக, கோயம்பேட்டில் இருந்து புனித தோமையர் மலை வரை 11 கி.மீ. தூரம் மேம்பாலத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் ரயிலை இயக்க திட்டமிட்டு பணிகள் வேகமாக நடந்து வந்தது. இந்த வழித்தடத்தில், கோயம்பேடு, சிஎம்பிடி, அரும்பாக்கம், வடபழனி, அசோக் நகர், சிட்கோ, ஆலந்தூர், புனித தோமை யர் மலை ஆகிய 8 ரயில் நிலையங்கள் உள்ளன.
முதல் கட்ட பணிகள் முடிந்ததால், கோயம்பேட்டில் இருந்து அசோக்நகர் வரை 6 கிலோ மீட்டர் தூரத்துக்கு கடந்த பிப்ரவரி 14ம் தேதி ஒரு வழித்தடத்தில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. பின்னர் கடந்த ஏப்ரல் மாதம் இரண்டு வழித்தடத்திலும் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. தற்போது, அசோக்நகர் அடுத்து சிட்கோ மற்றும் ஆலந்தூர் ரயில் நிலையம் வரை தண்டவாளம் அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளது.
இந்நிலையில், நேற்று காலைமுதல், அசோக்நகர் முதல் ஆலந்தூர் வரை 4 கி.மீ. தூரத்திற்கு ஒருவழி பாதை யில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் தொடங்கியது. மேலாண் இயக்குனர் பங்கஜ்குமார் பன்சால் உள்ளிட்ட உயர் அதிகாரிகள், ரயிலில் பயணம் செய்து ஆய்வு செய்தனர்.
இது குறித்து மெட்ரோ ரயில் அதிகாரிகள் கூறுகையில்: அசோக்நகர்-ஆலந்தூர் இடையே தொடங்கியுள்ள சோதனை ஓட்டத்தை தொடர்ந்து, வரும் நாட்களில் கோயம்பேட்டில் இருந்து வடபழனி, அசோக்நகர், ஆலந்தூர் வரை 10 கி.மீ வரை சோதனை ஓட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக வரும் அக்டோபர் 2ம் வாரம் பயணிகள் சேவைக்காக மெட்ரோ ரயில் ஓடத்தொடங்கும் என்றனர்.