மீன்காரம்மாக்களுக்கு மட்டுமே தில் ஜாஸ்தி.. தைரியமாக ரூ. 500, 1000 நோட்டுக்களை வாங்கினர்!
கோயம்பேடு காய்கறி சந்தையில் 500, 1000 ரூபாய் நோட்டுக்களை வாங்க வியாபாரிகள் தயக்கம் காட்டிய நிலையில் சிந்தாரிப்பேட்டை மீன் மார்க்கெட்டில் பலரும் 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுக்களை தயக்கமின்றி பெற்றனர்
சென்னை: 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளுக்கு விதிக்கப்பட்ட திடீர் தடையால் கோயம்பேடு வணிகவளாகத்தில் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
கோயம்பேடு வணிகவளாகத்தில் விடியற்காலை முதலே வியாபாரம் சூடுபறக்கும் நிலையில், 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளுக்கு மத்திய அரசு விதித்த திடீர் தடையால் வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர்.
சிறு வியாபாரிகள் முதல் மொத்த வியாபாரிகள் வரை அனைவரின் கைகளிலுமே 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் சர்வ சாதாரணமாக புழங்கும் என்பதால் மத்திய அரசின் தடை மக்களை வெகுவாக பாதித்தது.
வெறிச்சோடிய கடைகள்
இந்த திடீர் தடை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்ததால் காலை வியாபாரத்திற்கு 100 ரூபாய் நோட்டுகள் கிடைக்கவில்லை என காய்கறி மற்றும் பழ வியாபாரிகள் கவலை தெரிவித்தனர். கோயம்பேடு சந்தையில் இன்றைய வியாபாரம் மந்த நிலையிலேயே நடைபெற்றது. பல கடைகள் வெறிச்சோடின.
கடைகளில் டல்
ரேசன்கடைகளிலும் இதே நிலையே நீடித்தது. பலரும் பொருட்களை வாங்காமல் திரும்பிச் சென்றனர். சில்லறையாக 100, 50 ரூபாய் கொண்டு வந்தவர்கள் மட்டுமோ
பொருட்களை வாங்கிச் சென்றனர். பலரும் புலம்பியவாறு திரும்பிச் சென்றனர்.
கடனுக்கு வியாபாரம்
மத்திய அரசின் இந்த திடீர் முடிவுக்கு வியாபாரிகள் வரவேற்பு தெரிவித்திருந்தாலும், சிறு வியாபாரிகளுக்கு மட்டும் சில தினங்களுக்கு விலக்கு அளித்திருக்கலாம் என கூறினர். இருப்பினும் தெரிந்த வியாபாரிகளிடம் மட்டும் 500 ரூபாய் நோட்டுகளை பெற்று கொண்டு வியாபாரம் செய்வதாக வணிகர்கள் தெரிவித்தனர். பலர் கடனுக்கு வியாபாரம் செய்தனர்.
மீன் கடைகளில் வியாபாரம்
சிறிய கடைகாரர்கள் பணத்தை வாங்க மறுக்கும் அதேவேளையில் நேற்று இரவு 12 மணி வரை பல நகைகடைகள் திறந்து வைத்து விற்பனை செய்துள்ளனர்.
இன்று காலையில் சிந்தாரிப்பேட்டை மீன் மார்க்கெட் உட்பட பல மார்க்கெட்களில் 500, 1000 ரூபாய் நோட்டுகளை வாங்கி கொள்கின்றனர். தங்களுக்கு வியாபாரம் நடந்தால் போதும் எனவும் வங்கிகளில் கொடுத்து நாங்கள் மாற்றிக்கொள்கிறோம் என்றும் தெரிவித்தனர்.
ஷாப்பிங் மால்கள்
அதே போல் பெரிய கடைகள் மற்றும் ஷாப்பிங் மால்களில் தடையின்றி 500, 1000 ரூபாய் நோட்டுக்களை பெற்றுக்கொண்டனர். இதனால் காய்கறிக் கடைகள், பூக்கடைகளில் வியாபாரம் மந்தநிலையில் காணப்பட்டாலும் ஷாப்பிங் மால்களில் வியாபாரம் சூடு பறந்தது.