தமிழகத்தில் பந்த்... கோயம்பேடு, ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுகள் மூடல்!
தமிழகத்தில் திமுக உள்ளிட்ட கட்சிகள் அழைப்பு விடுத்துள்ள பந்த் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள கடைகள் மூடப்பட்டன.
சென்னை: விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து இன்று நடைபெற்று வரும் முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கோயம்பேடு மாரக்கெட் மூடப்பட்டுள்ளது. இதேபோல் ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி மார்க்கெட்டும் மூடப்பட்டுள்ளது.
விவசாயிகளின் கோரிக்கைகள், நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு, மதுவிலக்கு, குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகள் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தன.
இதற்கு தமிழகம் முழுவதும் ஆதரவு பெருகிவருகிறது. இன்று தமிழகம் முழுவதும் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு, வாகனங்கள் இயங்கவில்லை. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த முழு அடைப்புப் போராட்டம் நடைபெறவுள்ளது.
அரசு பேருந்துகளும் குறைந்த அளவிலேயே இயங்கி வருகிறது. கோயம்பேட்டில் உள்ள பூ, காய், கனி மார்கெட்டுகள் மூடப்பட்டன. இதனால் கோயம்பேட்டில் இருந்து திருவள்ளூர், விழுப்புரம், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு காய்கறிகள் அனுப்பப்படவில்லை.
மேலும் திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி மார்க்கெட்டும் மூடப்பட்டது. இதனால் கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு காய்கறி செல்லவில்லை. நியாயமான கோரிக்கைகள் என்பதால் பொதுமக்களும், வணிகர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.