கார்த்திகையிலும் குறைந்த விலை... தக்காளி... காய்கறிகளை கை நிறைய அள்ளிக்கிட்டு வாங்க
கார்த்திகை மாதத்தில் காய்கறிகள் விலை அதிகமாக இருக்கும் ஆனால் இப்போது வரத்து அதிகரித்துள்ளதால் சென்னையில் காய்கறிகள் விலை குறைந்துள்ளது.
சென்னை: கோயம்பேடு சந்தைக்கு காய்கறி வரத்து அதிகரித்துள்ளதால் அவற்றின் விலை வெகுவாக குறைந்துள்ளது. தக்காளி ஒரு கிலோ ரூ.20க்கும் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
கடந்த சில மாதங்களாகவே காய்கறிகள் வாங்குவதில் வீட்டு பட்ஜெட் அதிகம் அடிவாங்கியது. இப்போது விலை குறைந்துள்ளதால் காய்கறிகளை மக்கள் மகிழ்ச்சியுடன் அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனர்.
சென்னையின் மிகப்பெரிய காய்கறி சந்தையான கோயம்பேடு மார்க்கெட்டிற்கு வெளிமாநிலங்களான கர்நாடகா, ஆந்திராவில் இருந்து அதிக அளவில் காய்கறிகள் வருகின்றன. கடந்த ஏப்ரல் மாதத்துக்கு பிறகு வறட்சியாலும், ஜூன் மாதத்துக்குப் பிறகு தென்மேற்கு பருவமழையால் பயிர்கள் சேதமடைந்ததாலும், கோயம்பேடு சந்தைக்கு காய்கறி வரத்து குறைந்தது.
விலை குறையும் காய்கறிகள்
தற்போது அண்டை மாநிலங்களில் மழைக்காலம் முடிந்த பிறகு, மேற்கொள்ளப்பட்ட சாகுபடியில் இருந்து தற்போது நல்ல மகசூல் கிடைத்து வருகிறது. அதனால் தற்போது அங்கிருந்து கோயம்பேடு சந்தைக்கு காய்கறிகள் வரத்து அதிகரித்துள்ளதால் அவற்றின் விலை குறைந்து வருகிறது.
சாம்பார் வெங்காயம் கண்ணீர்
கடந்த சில மாதங்களாவே சாம்பார் வெங்காயம் ஒரு கிலோ ரூ.150க்கு விற்பனையாகிறது. தக்காளி கிலோ ரூ. 75 வரை விற்பனையானது. அவரைக்காய், கேரட், பீன்ஸ் ஆகியவை ரூ. 100 வரையும் உயர்ந்தன. கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ரூ.40க்கு விற்கப்பட்ட தக்காளி நேற்று ரூ.20க்கு விற்பனையானது.
பல்லாரி வெங்காயம்
சாம்பார் வெங்காயம் ரூ.110, கத்தரிக்காய் ரூ.20, அவரைக்காய் ரூ.35, முள்ளங்கி ரூ.8, முட்டைக்கோஸ் ரூ.12, கேரட் ரூ.40, பீட்ரூட் ரூ.15, பச்சை மிளகாய் ரூ.20 என குறைந்துள்ளது. வெங்காயம் ரூ.42, வெண்டைக்காய் ரூ.35, பாகற்காய் ரூ.25, பீன்ஸ் ரூ.60, புடலங்காய் ரூ.18 என இந்தக் காய்கறிகள் பெரிய அளவில் விலை ஏற்ற, இறக்கம் இன்றி விற்பனையாகி வருகின்றன.
சைவ உணவு அதிகம்
கார்த்திகை மாதம் ஐயப்ப பக்தர்கள், முருக பக்தர்கள் அதிகம் பேர் மாலை அணிந்து விரதம் இருப்பார்கள் சைவ உணவுகளையே அதிகம் சாப்பிடுவார்கள். இதனால் காய்கறிகளின் விலை அதிகமாகவே விற்பனையாகும். இந்த ஆண்டு வரத்து அதிகரிப்பால் விலை குறைந்துள்ளதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சியுடன் பை நிறைய காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர்.