மழைநீர் தேங்குவதால் கோயம்பேடு சந்தையில் தொற்றுநோய் அபாயம் - மாநகராட்சி அதிகாரிகள் மெத்தனம்
காய்கறிக்கழிவுகளோடு மழைநீரும் தேங்கி இருப்பதால் கோயம்பேட்டில் தொற்றுநோய் பாதிப்பு ஏற்படும் என மக்கள் அச்சம்
சென்னை : சென்னையில் நேற்று முதல் வடகிழக்குப் பருவமழை பெய்துவருகிறது. இன்னும் ஐந்து நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவ மழை ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் மழை வெளுத்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் மழை பெய்யும் போதும் சென்னை நகரம் மழைத்தண்ணீரில் தத்தளித்து வருகிறது.
இந்த ஆண்டு பருவமழை தொடங்குவதற்கு முன்பே நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து அரசியல் கட்சிகளும் வலியுறுத்திய நிலையில் பெயரளவிலேயே மழைத்தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஆனால், மாநகராட்சி சார்பில் பல வேலைகள் செய்யப்பட்டதாக அதிகாரிகள் பேட்டி அளித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று முதல் சென்னையில் வடகிழக்குப் பருவமழை ஆரம்பித்தது. மழை ஆரம்பித்த ஒரு மணி நேரத்திலேயே சென்னையின் பல முக்கியப் பகுதிகள் நிரம்பி வழிந்தன. சாலைகளில் ஓடிய மழைநீரால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இந்தநிலை இப்போது வரை தொடர்கிறது.
இதில் முக்கியமாக பாதிக்கப்பட்டுள்ளது சென்னையின் பரபரப்பான இடங்களில் ஒன்றான கோயம்பேடு. இங்கு தான் அரசு மற்றும் ஆம்னி பேருந்து நிலையமும், மிகப்பெரிய காய்கறி சந்தையும் அமைந்துள்ளது. தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் பகுதியாக உள்ளது.
கோயம்பேடு காய்கறி சந்தையின் கழிவுகளே முழுவதும் அகற்றப்படாமல் இருக்கும் நிலையில், தற்போது இந்தப் பகுதி முழுவதும் மழைநீர் சாலைகளில், மார்க்கெட் தெருக்களில் தேங்க ஆரம்பித்து இருக்கிறது. இதனால் அந்தப் பகுதியில் தொற்றுநோய் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
ஏற்கனவே டெங்கு பாதிப்பு இருக்கும் நிலையில், இந்தக் கழிவு மற்றும் மழைநீரால் மக்கள் அச்சம் அடைந்து இருக்கிறார்கள். போதிய தூய்மைப் பணியாளர்களை மாநகராட்சி இங்கு பணியில் அமர்த்தாததே இந்தப் பிரச்னைக்குக் காரணம் என்றும் அவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.