காவிரிக்காக கடைகள் மூடல்: வெறிச்சோடி கிடக்கும் கோயம்பேடு மார்க்கெட்
காவிரிக்காக இன்று கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் அப்பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது.
Recommended Video
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழகம் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகிறது. இதில் மத்தியில் எந்த ஆட்சி வந்தாலும் தமிழகத்தின் கோரிக்கை மட்டும் நிறைவேறுவதே இல்லை.
இந்நிலையில் காவிரிக்காக திட்டம் ஒன்றை 6 வாரங்களுக்குள் ஏற்படுத்த வேண்டும் என்று கடந்த பிப்ரவரி மாதம் 16-ஆம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அதற்கான காலக்கெடு முடிவடைந்த போதிலும் மத்திய அரசு செவிசாய்க்கவில்லை.
இதனால் தமிழகத்தில் மத்திய அரசுக்கு எதிரான போராட்டங்கள் வலுபெற்றன. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து தமிழகத்தில் வணிகர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதுபோல் கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள கடைகளும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளன. அதன்படி 2500-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. 200-க்கும் மேற்பட்ட மூட்டை தூக்கும் தொழிலாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடையடைப்பு போராட்டம் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டதால் சரக்கு லாரிகள் ஏதும் மார்க்கெட்டுக்கு வரவில்லை. இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் கோயம்பேடு மார்க்கெட் வெறிசோடி காணப்படுகிறது.