ஆர்.கே.நகர்: மதுசூதனனுக்கு சீட் இல்லைன்னா எனக்குதான்... அடம்பிடிக்கும் கே.பி. முனுசாமி!
ஆர்.கே.நகர் தொகுதியில் மதுசூதனனுக்கு சீட் தராவிட்டால் தமக்குதான் வாய்ப்பு தர வேண்டும் என கே.பி. முனுசாமி வலியுறுத்துகிறாராம்.
Recommended Video
சென்னை: ஆர்.கே.நகர் தொகுதியில் மதுசூதனனுக்கு சீட் மறுக்கப்பட்டால் தமக்குத்தான் தர வேண்டும் என முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி வரிந்து கட்டிக் கொண்டு நிற்கிறாராம்.
அதிமுக அணிகள் இணைந்துவிட்டதாக அறிவித்தாலும் அக்கப்போருக்கு அளவில்லை என்பதை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் அம்பலப்படுத்திவிட்டது. ஆர்.கே. நகர் தொகுதியில் யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பதில் அதிமுக கோஷ்டிகள் அடித்துக் கொண்டிருக்கின்றன.
ஓபிஎஸ் மீது நம்பிக்கை
இரட்டை இலை கிடைத்துவிட்ட கோதாவில் எப்படியும் இன்னொரு ரவுண்டு வலம் வரலாம் என 80 வயதிலும் துடியாய் துடிக்கிறார் மதுசூதனன். நிச்சயம் ஓபிஎஸ் நம்மை கைவிடமாட்டார் என தளராத நம்பிக்கையுடன் இருக்கிறார் மதுசூதனன்.
இருப்புக்கே உலை
ஆனால் மதுசூதனன் வெற்றி பெற்றுவிட்டால் அடுத்து அமைச்சர் பதவி கட்டாயம் கொடுக்க நேரிடும்; இது தமது இருப்புக்கே உலை வைப்பதாகிவிடும் என்பதால்தான் அமைச்சர் ஜெயக்குமார் மிகக் கடுமையாக எதிர்க்கிறார். இதை உணர்ந்த ஓபிஎஸ் அணியின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.பி. முனுசாமி தமக்கு சீட் கேட்டு வருகிறார்.
வன்னியர் வாக்குகள்
மதுசூதனனுக்கு இல்லையெனில் வன்னியர் வாக்குகள் அதிகம் உள்ள ஆர்.கே.நகர் தொகுதியை எனக்கு தாருங்கள்.. நான் எளிதாக வெல்வேன் என கறார் காட்டுகிறாராம் கேபிமுனுசாமி. அவருக்கு ஆதரவாக மைத்ரேயன் உள்ளிட்டோரும் கச்சைகட்டிக் கொண்டு நிற்கிறார்களாம்.
நெருக்கடியில் ஓபிஎஸ்
ஏற்கனவே இணைந்தது போல் இணைத்து ஓரம்கட்டி வைக்கிறார்கள்... இப்போது ஆர்.கே.நகர் தொகுதி வேட்பாளரும் நாமாக இல்லாமல் போனால் நிச்சயம் பூஜ்யம்தான்.. என ஓபிஎஸ்ஸை நச்சரிக்கிறார்கள். ஆனால் ஓபிஎஸ்ஸோ என்னதான் நிலைப்பாடு எடுப்பது என தெரியாமல் தவியாய் தவிக்கிறாராம்.