சசிகலா தரப்பு அராஜகங்களை அதிரடியாக போட்டுடைத்த ஓபிஎஸ்க்கு கே.பி.முனுசாமி நேரில் வாழ்த்து
சசிகலாவின் குடும்பத்தினர் செய்த அராஜகங்களை மக்கள் முன் போட்டுடைத்த முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை கேபி.முனுசாமி நேரில் சென்று வாழ்த்துக் கூறினார்.
சென்னை: அதிமுகவை கைப்பற்றிய சசிகலா குடும்பத்தினர் செய்த அராஜகங்களை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று செய்தியாளர்கள் முன்னிலையில் தெரிவித்தார். இதையடுத்து ஏற்கனவே மன்னார்குடி கும்பலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி ஓபிஎஸை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக பொதுச்செயலாளராக பதவியேற்று சசிகலா கட்சியை கைப்பற்றினார். இதைத்தொடர்ந்து தஞ்சாவூரில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பேசிய திவாகரன், அதிமுகவை காப்பாற்றியதில் தங்களுக்கு பெரும் பங்கு உள்ளதாக கூறினார்.இதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கடும் கண்டனம் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து பேசிய நடராஜன் குடும்ப அரசியல் செய்வோம் என பகிரங்கமாக கூறினார். நடராஜனின் இந்த பேச்சு அதிமுக தொண்டர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த கேபி.முனுசாமி தீயசக்தி நடராஜனை வெளியேற்றுங்கள் என சசிகலாவுக்கு கோரிக்கை விடுத்தார். இதனால் சசிகலா தரப்புக்கும் கே.பி.முனுசாமிக்கும் இடையே மோதல் வலுத்தது.
இந்நிலையில் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் செய்த அராஜகங்களை அதிரடியாக போட்டுடைத்த முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை அவரது வீட்டில் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.