தளவாய் சுந்தரமும், நாஞ்சில் சம்பத்தும் தினகரனிடம் வாங்கிய கூலிக்கு மாரடிக்கின்றனர் - கே.பி. முனுசாமி
தளவாய் சுந்தரமும், நாஞ்சில் சம்பத்தும் டிடிவி தினகரனிடம் வாங்கிய கூலிக்கு மாரடிக்கின்றனர் என்று ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.பி முனுசாமி பேசியுள்ளார்.
சென்னை: நாஞ்சில் சம்பத்தும், தளவாய் சுந்தரமும் லட்சக்கணக்கில் பணத்தை வாங்கிக் கொண்டு டிடிவி தினகரன், சசிகலாவிற்கு ஆதரவாக பேசி வருவதாக முன்னாள் அமைச்சர் கே.பி முனுசாமி குற்றம் சாட்டியுள்ளார். ஜெயலலிதாவையே விமர்சனம் செய்து பேசுகிறார் நாஞ்சில் சம்பத், அவருக்கு உறுதுணையாக இருக்கிறார் தளவாய் சுந்தரம், அவர்கள் இருவரும் வாங்கிய கூலிக்கு மாரடிக்கின்றனர் என்றும் அவர் கடுமையாக சாடியுள்ளார்.
சென்னையில் கிரீன்வேஸ் சாலையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி சசிகலா, டிடிவி தினகரனை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்றார்.
தளவாய் சுந்தரம்
டிடிவி தினகரனால் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமிக்கப்பட்ட தளவாய் சுந்தரத்திடம் இருந்து பறிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். சசிகலா, டிடிவி தினகரனுக்கு ஆதரவாக நாஞ்சில் சம்பத் செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசியல் அபலை
மதிமுகவில் இருந்து அரசியல் அபலையாக வெளியேறிய நாஞ்சில் சம்பத்திற்கு ஆதரவு கொடுத்தவர் ஜெயலலிதா. பிரச்சாரத்திற்கு இன்னோவா கார் கொடுத்தார். அதற்கு ஏற்பாடு செய்தது நத்தம் விஸ்வநாதன்.
மகன் திருமணம்
நாஞ்சில் சம்பத்தின் மகன் திருமணத்தை ஆடம்பரமாக நடத்த பணம் கொடுத்தது யார்? அவருடைய மருத்துவ சிகிச்சைக்கு பணம் கொடுத்தது ஜெயலலிதாதான். இன்றைக்கு அதே ஜெயலலிதாவை விமர்சனம் செய்கிறார் நாஞ்சில் சம்பத்.
யார் தலைவர்
தமிழகத்தில் உள்ள மிகப்பெரிய தலைவர்களை விட ஒப்பற்ற தலைவர் டிடிவி தினகரன் என்று பேசியுள்ளார் நாஞ்சில் சம்பத். இது போன்ற கூட்டங்களை ஏற்பாடு செய்வது தளவாய் சுந்தரம்தான். இருவரும் டிடிவி தினகரனிடம் எத்தனை லட்சம் பணத்தை வாங்கியிருப்பார்கள்?. இருவருமே கூலிக்கு மாரடிக்கின்றனர் என்று கே.பி முனுசாமி குற்றம் சாட்டியுள்ளார்.