கோபியர் கொஞ்சும் ரமணா.. கோபால கிருஷ்ணா.. நாளை கிருஷ்ண ஜெயந்தி.. விழாக்கோலத்தில் மக்கள்!
சென்னை: கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரி மாணவிகள் கண்ணனாகவும் கோபியர்களாகவும் மாறி நடனமாடி அசத்தினர்.
ஆவணிமாதம் அஷ்டமி திதியில் ரோகிணி நட்சத்திர தினத்தில் அவதரித்தார் கண்ணன் என்கின்றன புராணங்கள். இந்த நாளை ஆண்டுதோறும் ஜென்மாஷ்டமியாக கொண்டாடுகின்றனர்.
வீடுகளில் அலங்கரித்து மாவிலை தோரணங்கள் கட்டி.... சின்னஞ்சிறு பாதம் வரைந்து... முறுக்கு, சீடை, அதிரசங்கள், இனிப்பு பட்சணங்கள் செய்து கண்ணனை வணங்குகின்றனர்.
வீடுகளில் மட்டுமல்லாது பள்ளிகளிலும், மாணவ, மாணவிகளும் கண்ணனாகவும்,ராதைகளாகவும் அலங்கரித்து கிருஷ்ண ஜெயந்தி விழாவை கொண்டாடுகின்றனர்.
கல்லூரி மாணவிகள்
சென்னை அடையாறில் உள்ள எம்.ஜி.ஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் கிருஷ்ண ஜெயந்தி விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
கண்ணனுடன் நடனம்
‘ஆடுகிறான் கண்ணன்' என்ற பெயரில் நாட்டிய நாடகமும் நடைபெற்றது. அதில் ஏராளமான மாணவிகள் கோபியர்களாக தங்களை அலங்கரித்துக்கொண்டு கண்ணனுடன் ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.
குழந்தைகள் கொண்டாட்டம்
கிருஷ்ண ஜெயந்தி விழா, நேற்று உடுமலையில் கொண்டாடப்பட்டது. காட் சத்சங்கம் உடுமலை கிளை சார்பில், ராமய்யர் திருமண மண்டபத்தில், நேற்று மதியம், 1:00 மணிக்கு, விழா துவங்கியது. பிற்பகல், 3:00 மணி வரை, 'ஹரே ராமா' நாம கீர்த்தனைகள் பாடப்பட்டது. பொதுமக்கள், பள்ளி குழந்தைகள், கிருஷ்ணர் சிலையை சுற்றி, கிருஷ்ண கீர்த்தனம் பாடியபடி கோலாட்டம் ஆடினர்.
நாட்டிய நாடகம்
குழந்தைகளின் நாட்டிய நாடகம் நடந்தது. குழந்தைகள் கிருஷ்ணர், ராதை வேடமணிந்து வந்தனர். மாலை வரை நடந்த விழாவில், ஏராளமானோர் பங்கேற்றனர்.