ஜென்மாஷ்டமி: சென்னை பெருமாள் ஆலயங்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா- ஸ்ரீரங்கத்தில் உறியடி
சென்னை: ஸ்ரீகிருஷ்ண ஜென்மாஷ்டமி எனப்படும் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு சென்னையில் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் பகவான் கிருஷ்ணர் பார்த்தசாரதியாய் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இந்த ஆலயத்தில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், அர்ச்சனை, ஆராதனை நிகழ்ச்சிகளும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மயிலாப்பூர் ஆதிகேசவ பெருமாள் கோவில், மாதவப்பெருமாள் கோவில், மேற்கு மாம்பலம் கோதண்டராமர் கோவில், தி.நகர் சிவா-விஷ்ணு கோவில், கோயம்பேடு வைகுண்ட வாசப்பெருமாள் கோவில், சவுகார்பேட்டை பிரசன்ன வெங்கடேஸ்வர பெருமாள் கோவில், சைதாப்பேட்டை பிரசன்ன வெங்கடேஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களில் சிறப்பு தரிசனத்துக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும் பூந்தமல்லி வரதராஜப்பெருமாள் கோவில், நெற்குன்றம் கரி வரதராஜப்பெருமாள் கோவில், கிண்டி கோதண்ட ராமர் கோவில், நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவில், லட்சுமி ஹயக்ரீவப் பெருமாள் கோவில் போன்ற கோவில்களிலும் நாளை சிறப்பு வழிபாடு, அர்ச்சனை, அபிஷேகம், ஆராதனை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
சென்னை சோழிங்கநல்லூர் அக்கரையில் அமைந்துள்ள கிருஷ்ணர் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா வரும் 25ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. முன்னதாக 24-ஆம் தேதி கிருஷ்ண யாகமும் நடைபெற உள்ளது.
அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் எனப்படும் இஸ்கான் அமைப்பு சார்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய நாளில் காலை முதல், நள்ளிரவு வரையில் சிறப்பு தரிசனம், சிறப்பு சங்காபிஷேகம், ஆரத்தி, கீர்த்தனை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. இதை முன்னிட்டு கர்நாடக இசைக்கலைஞர் சுதா ரகுநாதன் குழுவினரின் பாடல் பஜனை நிகழ்ச்சி, ஸ்ரீ ஜெயபாடக சுவாமியின் ஆன்மிகச் சொற்பொழிவும் நடைபெறவுள்ளது. பங்கேற்கும் பக்தர்கள் அனைவருக்கும் நாள் முழுதும் பிரசாதம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
26ம் தேதி, இஸ்கான் அமைப்பின் தலைமை ஆச்சாரியர் ஸ்ரீலபிரபுபாதரின் அவதார திருநாள் நந்தோத்சவம் எனும் பெயரில் கொண்டாடப்படவுள்ளது என அந்த அமைப்பின் விழா ஒருங்கிணைப்பாளர் ஜி.கே.தாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை ராஜா அண்ணாமலைபுரம் சிருங்கேரி பிரவச்சன மந்திரத்தில் நாளை காலை 8.30 மணி முதல் கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீரங்கநாதர் ஆலயம்
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியையட்டி ஆகஸ்டு 26ம்தேதி காலை 10 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்படுகிறார். அன்றைய தினம் காலை 6.15 மணி முதல் 7.15 மணி வரை விஸ்வரூப சேவை உண்டு. பூஜை காலமான காலை 7.15 மணி முதல் 10 மணி வரை மூலவர் சேவை கிடையாது. காலை 10 மணி முதல் 5.15 மணி வரை சேவை நேரம் ஆகும். மாலை 5.15 மணிக்கு மேல் மூலவர் சேவை கிடையாது.
உறியடி திருவிழா
ஆகஸ்டு 27ம்தேதி காலை 7.15 மணிக்கு ஸ்ரீ கிருஷ்ணன் புறப்பாடு, காலை 9 மணிக்கு சித்திரை வீதிகளில் எண்ணெய் விளையாட்டு கண்டருளி கிருஷ்ணர் சன்னதிக்கு வந்து சேருதல், மாலை 3 மணிக்கு நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் திருச்சிவிகையில் புறப்பாடும், மாலை 4 மணிக்கு யாதவ உறியடி ஆஸ்தான மண்டபம் சேருதலும், மாலை 6.30 மணிக்கு மண்டபத்தில் இருந்து புறப்பாடும், இரவு 8.15 மணிக்கு சித்திரை வீதிகள் வலம் வந்து உறியடி கண்டருளுதலும், இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் சேருதலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.