கிருஷ்ணகிரி வங்கிக் கொள்ளை- ஜார்க்கண்ட்டில் ஒருவர் கைது! வங்கதேசத்துக்கு தப்பிய கொள்ளையர்கள்!!
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் வங்கி ஒன்றில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடைய ஒருவரை ஜார்க்கண்ட் மாநிலத்தில் போலீசார் கைது செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி அருகே உள்ள ராமாபுரத்தில் குந்தாரப்பள்ளி பேங்க் ஆப் பரோடா வங்கி கிளையில் கடந்த மாதம் 24 ஆம் தேதி அதிகாலை நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.
வங்கியின் பின்புற கதவை உடைத்து உள்ளே புகுந்து பாதுகாப்பு பெட்டகத்தை கேஸ் வெல்டிங் மூலம் உடைத்து 6,033 பவுன் தங்க நகைகளை அந்த கும்பல் கொள்ளையடித்துச் சென்றது. இதன் மதிப்பு ரூபாய் 12 கோடியாகும்.
இந்த கொள்ளை சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொள்ளையில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
அவர்கள் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, ஜார்கண்ட், ஒரிசா, மேற்கு வங்காளம் என பல்வேறு மாநிலங்களுக்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.
இதற்கிடையே, கொள்ளை நடந்த வங்கியில் 2 மாதங்களுக்கு முன்பு கதவுகளை சரி செய்வதற்காக வடமாநில தொழிலாளி ஒருவர் வந்து சென்றார். இதனால் அவர் மீதும் போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.
அவரை தேடி கண்டுபிடித்து விசாரித்தனர். அப்போது அவருக்கு இதில் தொடர்பு இல்லை என்றும், அவர் கிருஷ்ணகிரியில் வசித்து வருவதும் தெரியவந்தது.
கடந்த ஒரு மாதமாக 10 தனிப்படை போலீசாரும் இந்த வழக்கில் தீவிரமாக விசாரணை நடத்தினார்கள். அதன் பயனாக தற்போது குற்றவாளிகள் யார் என அடையாளம் தெரிந்துள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தில் பதுங்கி இருந்த முக்கிய குற்றவாளி ஒருவனை போலீசார் பிடித்துவிட்டதாக கூறப்படுகிறது.
அந்த குற்றவாளிக்கு தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத், கர்நாடக மாநிலம் மைசூர் ஆகிய இடங்களில் நடந்த வங்கி கொள்ளையிலும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவனது கூட்டாளிகள் வங்காளதேசத்திற்கு தப்பி ஓடி விட்டார்கள். அவர்களை பிடிப்பதற்காக தனிப்படை போலீசார் மேற்கு வங்காளம் விரைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் பிடிபட்ட பிறகே நகைகளை எங்கே பதுக்கி வைத்துள்ளனர் என்ற விவரங்கள் தெரியவரும்.
இதுபற்றி ஒரு போலீஸ் அதிகாரியிடம் கேட்டபோது, ‘‘வங்கியில் நடந்த நகை கொள்ளை வழக்கு தொடர்பாக ஒரு மாதமாக இரவு, பகலாக தொடர்ந்து விசாரணை நடத்தினோம். தற்போது இந்த வழக்கில் துப்பு துலங்கிவிட்டது. குற்றவாளிகளின் அடையாளமும் காணப்பட்டுவிட்டது. விரைவில் அனைவரும் கைது செய்யப்படுவார்கள்'' என்றார்.