சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த தொழிலாளிக்கு 11 ஆண்டு சிறை.. கிருஷ்ணகிரி நீதிமன்றம் அதிரடி
பள்ளி மாணவியை பாலியல் வன்புணர்வு செய்த தொழிலாளிக்கு 11 ஆண்டு சிறை
கிருஷ்ணகிரி: பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 11 ஆண்டு சிறை தண்டனை விதித்து கிருஷ்ணகிரி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூரைச் சேர்ந்தவர் மோகன், 45. இவர் ஒரு கூலித்தொழிலாளி. இவர் கடந்த 2013-ம் வருடம், இவருக்கு பக்கத்து வீட்டில் குடியிருந்த ஒரு வீட்டின் சிறுமியிடம் தகாத முறையில் நடந்துள்ளார். அந்த சிறுமி அப்பகுதியில் உள்ள ஒன்றில் 6-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். அப்போது அவருக்கு வயது 11. சிறுமியை கூலித்தொழிலாளி மோகன் ஆசை வார்த்தை கூறி ஓசூர் அழைத்து சென்றார்.
அங்கு மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார். மேலும் இதை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டினார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி அவரது பெற்றோரிடம் முறையிட்டதையடுத்து, அவரது பெற்றோர் ஓசூர் டவுன் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி கூலித்தொழிலாளி மோகனை கைது செய்தனர்.
இந்த வழக்கு கிருஷ்ணகிரி மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அன்புச்செல்வி குற்றம் சாட்டப்பட்ட மோகனுக்கு, மைனர் பெண்ணை கடத்திய குற்றத்திற்காக 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும், பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக போக்சோ பிரிவின் கீழ் 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும், கொலை மிரட்டல் விடுத்த குற்றத்திற்காக 6 மாத சிறை தண்டனையும் ரூ.1000 அபராதமும் என மொத்தம் 11 ஆண்டுகள் 6 மாதம் தண்டனையும், 5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.