மிதக்கும் சுடுகாடு.. தேங்கி நிற்கும் எலும்பு கூடுகள்.. பெரும் அவதியில் கிருஷ்ணகிரி கிராம மக்கள்
சுடுகாடு சுற்றிலும் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் இறந்தவர்களை புதைக்க முடியவில்லை என குற்றஞ்சாட்டப்படுகிறது.
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியின் சுற்றுவட்டார பகுதிகளில் மழைகாலங்களில் சுடுகாடுகள் தண்ணீரில் மூழ்கி விடுவதால், பிணங்களை புதைக்க குழி தோண்டும்போது, ஏற்கனவே இறந்தவர்களின் எலும்புகள், மண்டை ஓடுகள் வெளியே வருவதாக பொதுமக்கள் தங்களது அவலங்களை வெளிப்படுத்தியுள்ளனர்.
கிருஷ்ணகிரி நகரை சுற்றியுள்ள பகுதியில் இறந்தவர்களின் உடலை பழையபேட்டை, பாப்பாரப்பட்டி, மேல்சோமார்பேட்டை, தேவசமுத்திரம், திருவண்ணாமலை ரோடு உள்ளிட்ட பகுதிகளில்உள்ள சுடுகாட்டில்தான் புதைக்கவோ அல்லது எரிக்கவோ செய்கின்றனர்.
இந்த சுடுகாடுகள் உள்ள பகுதிகள் பெரும்பாலும் ஏரிகளின் அருகில் உள்ளதால், இறந்தவர்களின் உடலை புதைக்க முடியாமல் பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். காரணம் சடலங்களை புதைக்க ஒரு அடி குழி தோண்டினாலே தண்ணீர் வந்து விடுகிறது. இதனால் தொடர்ந்து குழி தோண்ட முடியாமல் தொழிலாளர்கள் அவதியடைவதுடன், அவ்வாறு தோண்டப்படும் குழியில் ஏற்கனவே பிணம் புதைக்கப்பட்டிருந்தால், அதில் எலும்பு கூடுகள், மண்டை ஓடுகள் தேங்கி வெளியே வருகிறது.
இவ்வாறு ஒரு புறம் இருக்க, தேவசமுத்திரம் பகுதியில் உள்ள சுடுகாட்டில் கிருஷ்ணகிரி நகரில் உள்ள சுமார் 10 வார்டுகளை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் உறவினர்கள் யாராவது இறந்தால், இந்த சுடுகாட்டில் தான் பிணங்களை புதைக்கின்றனர். மழை காலங்களில் இந்த சுடுகாடு தண்ணீரில் மூழ்கிவிடுவதால், இறந்தவர்களின் உடலை புதைக்க முடியாமல், தண்ணீரில் சிறிது அளவு மட்டுமே குழி தோண்டு, அந்த தண்ணீரிலேயே இறந்தவர்களின் உடலை புதைத்துவிட்டு செல்லும் அவல நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது.
இந்த சுடுகாட்டின் அருகில்தான் பழமைவாய்ந்த காட்டு வீர ஆஞ்சநேயர் கோயிலும் உள்ளது. இந்த கோயிலுக்கு சனிக்கிழமை மட்டுமின்றி, அனைத்து நாட்களிலும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அவ்வாறு கோயிலுக்கு வருபவர்கள் இந்த சுடுகாட்டில் இருந்து வரும் துர்நாற்றத்தால் மூக்கை மூடியபடி கோயிலுக்கு சென்று வருகின்றனர்.
அத்துடன் இந்த சுடுகாடு முழுவதும் புதர் மண்டி உள்ளது. மேலும் இந்த சுடுகாடு முழுவதும் தண்ணீர் தேங்கியுள்ளதால், ஆகாய தாமரை செடிகளும் அதிக அளவில் உள்ளது. இதனால் ஏராளமான விஷ ஜந்துகள் நடமாட்டம் உள்ள பகுதியாக உள்ளது.எனவே, இந்த சுடுகாட்டிற்குள் தண்ணீர் வராமல் தடுத்து, அதற்கான கால்வாயை வெட்டி, ஏரியில் விடுவதற்கான நடவடிக்கையினை எடுக்க வேண்டும். அததுடன் சுடுகாட்டை சுற்றி சுற்றுச்சுவர் கட்ட வேண்டும் என பல ஆண்டுகளாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.