பட்டாவுக்கு விலை ரூ.1000 – லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ கைது
கிருஷ்ணகிரி: ஓசூரில் பட்டா வழங்க விவசாயியிடம் 1000 ரூபாய் லஞ்சம் வாங்கியதாக வி.ஏ.ஓ கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அருகே ரூபாய் 1,000 லஞ்சம் வாங்கியதாக கிராம நிர்வாக அலுவலரை ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
தருமபுரி மாவட்டம், அரூர் அருகிலுள்ள சித்தேரிமலையைச் சேர்ந்தவர் ரஜினி. இவர் ஒசூர் வட்டம், உத்தனப்பள்ளி பக்கமுள்ள துப்புகானப்பள்ளி கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில், சின்ன பேட்டகானப்பள்ளியைச் சேர்ந்த ஆனந்த ஆச்சாரி என்பவர் தனது நிலத்துக்குப் பட்டா வழங்குமாறு கேட்டு கிராம நிர்வாக அலுவலரிடம் மனு செய்துள்ளார்.
பட்டா கொடுக்க ஆவணங்கள் வேண்டுமானால் தனக்கு ரூபாய் 2,000 லஞ்சமாக கொடுக்கவேண்டுமென ரஜினி கேட்டுள்ளார். இதில், ரூபய 1,000 ஐ முன்பணமாகக் கொடுத்த ஆனந்த ஆச்சாரி, மீதிப் பணத்தைக் கொடுக்காமல், கிருஷ்ணகிரி ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு போலீஸாரிடம் கிராம நிர்வாக அலுவலர் ரஜினி மீது புகார் கொடுத்துள்ளார்.
புகாரை பெற்ற ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு துணைக் கண்காணிப்பாளர் ஞானசேகரன், ஆய்வாளர் முருகன் ஆகியோர் துப்புகானப்பள்ளி கிராம நிர்வாக அலுவலகத்தில், ஆனந்த ஆச்சாரியிடமிருந்து ரசாயனம் தடவிய ரூபாய் 1,000யை கிராம நிர்வாக அலுவலர் ரஜினி பெறும்போது பிடித்தனர்.
தொடர்ந்து, அவரைக் கைதுசெய்த போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் மீது துறை ரீதியான நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.