ராமருக்கு உதவிய அணில் மாதிரி ஆட்சிக்கு உதவுகிறோம் - கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ கீதா
ஒன்றிணைந்த அதிமுகவுக்கும் ஆட்சிக்கும் அணில் போல் உதவுவதாக கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ கீதா தெரிவித்தார்.
கரூர்: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சி தற்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நன்றாக நடக்கிறது. இந்த ஆட்சிக்கு நான் அணில் போல் உதவிக்கொண்டுள்ளேன் என கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தொகுதி எம்.எல்.ஏ கீதா தெரிவித்துள்ளார்.
ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் இணைந்ததை அடுத்து, 19 தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாக ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் தெரிவித்தார்கள்.
மேலும், எங்கள் தரப்புக்கு எம்.எல்.ஏக்கள் வருவார்கள் என தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ தங்க தமிழ்செல்வன் கூறினார். இதனால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணியை சேர்ந்தவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்நிலையில் கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தொகுதி எம்.எல்.ஏ கீதா செய்தியாளர்களைச் சந்தித்து, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அனியும் ஓபிஎஸ் அணியும் இணைந்ததில் அனைவருமே மகிழ்ச்சி அடைகிறோம்.
நான் ராமாயணத்தில் ராமனுக்கு உதவிய அணில் போல் இரு அணிகள் இணைப்புக்கும் ஆட்சிக்கும் உதவி செய்வேன் என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.