நீட்: வரலாறு தெரியாமல் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி பேசக் கூடாது - டிகேஎஸ் இளங்கோவன் தாக்கு
நீட் தேர்வில் என்ன நடந்தது என வரலாறு தெரியாமல் கிருஷ்ணசாமி பேசக் கூடாது என திமுக செய்தி தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் சாடியுள்ளார்.
விருதுநகர்: ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் திமுக இருந்த போது, நீட் தேர்வுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து தேர்வு தேவை இல்லை என தீர்ப்பளித்தது என திமுக செய்தி தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.
அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்தையடுத்து தமிழகமே கொந்தளித்துள்ளது. இந்நிலையில் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கும் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி பல்வேறு சர்ச்சைக் கருத்துக்களை கூறிவருகிறார். அனிதாவின் மரணத்துக்கு திமுகதான் காரணம் என கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில் ராஜபாளையத்தில் பேசிய திமுக செய்தி தொடர்பாளர் இளங்கோவன், ''கிருஷ்ணசாமி வரலாறு தெரியாமல் பேசுகிறார். ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் திமுக இருந்த போதுதான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது என கிருஷ்ணசாமி கூறுகிறார்.
ஆனால், நீட் தேர்வுக்கு எதிராக திமுக உச்சநீதிமன்றத்தில் 2013ல் வழக்குத் தொடர்ந்தது. அதனைத் தொடர்ந்து நீதிமன்றமும் அந்த தேர்வை ரத்து செய்தது. ஆனால் இந்த வரலாறு தெரியாமல் கிருஷ்ணசாமி பேசி வருவது சந்தர்ப்பவாதம்.
அதன் பிறகு மெடிக்கல் கவுன்சில் சட்டத்தைத் திருத்தி, அதன் மூலம் நீட் தேர்வை பாஜக அரசுதான் கொண்டு வந்தது. இந்த விஷயங்கள் அனைத்தும் கிருஷ்ணசாமிக்கு அவரசம் மற்றும் ஆத்திரம் காரணமாக தெரியாமல் போகிறது.
நீட் தேர்வு விவகாரத்தில் உச்சநீதி மன்றம் கொடுத்த தீர்ப்பில், இந்த தேர்வு தேவை இல்லை. இது மாநில உரிமை என்று உத்தரவிட்டதை கிருஷ்ணசாமி எடுத்துப் பார்க்க வேண்டும்'' என்று கூறினார்.