விஷ்ணுபிரியா வழக்கு... கிருஷ்ணசாமி வாயை மூடிக் கொண்டிருந்தால் நலம்... யுவராஜின் ஆடியோ பேச்சு
நாமக்கல்: விஷ்ணுபிரியா மரணம் தொடர்பாக புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி ஒன்றும் தெரியாமல் பேசுகிறார் என கோகுல்ராஜ் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள யுவராஜ் தனது வாட்ஸ் அப் ஆடியோவில் தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுபிரியா கடந்த 18ம் தேதி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தலித் இளைஞர் கோகுல்ராஜ் கொலை தொடர்பாக விசாரணை நடத்தி வந்த விஷ்ணுபிரியா உயரதிகாரிகளின் நெருக்கடி காரணமாகவே இந்த முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், விஷ்ணுபிரியாவின் தற்கொலைக்கு போலீஸ் அதிகாரிகளே காரணம் என்றும், இந்த அதிகாரிகளுக்கு போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் பாதுகாப்பு அளித்து வருவதாகவும் கோகுல்ராஜ் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள யுவராஜ் வாட்ஸ் அப் வழியாக ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த ஆடியோவில் அவர், இந்த வழக்குத் தொடர்பாக புதிய தமிழகம் கிருஷ்ணசாமி தேவையில்லாமல் உண்மைக்கு புறம்பானவற்றைப் பேசி வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், இது தொடர்பாக தனது ஆடியோவில் அவர் கூறியிருப்பதாவது:-
கோகுல்ராஜ் கொலைவழக்கில் விஷ்ணுபிரியா என்னை நெருங்கும் போதெல்லாம், நாமக்கல் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் செந்தில்குமார் அதனைத் தடுத்து நிறுத்தி என்னை காப்பாற்றி விட்டதாக கிருஷ்ணசாமி கூறி வருகிறார்.
தயவுசெய்து அவர் வாயை மூடிக் கொண்டிருந்தால் நல்லது என நினைக்கிறேன். ஏனென்றால் இந்த வழக்கில் ஏதாவது ஒன்று தெரியுமா அவருக்கு.
நான் கிருஷ்ணசாமி முன் வைக்கும் வேண்டுகோள் ஒன்றே ஒன்று தான். நீங்கள் அதிமுக ஆட்சியின் ஆதரவில்லாமல் ஒரு வார்டு மெம்பர் கூட ஆகியிருக்க முடியாது. ஆனால், சுயநலத்திற்காக நீங்கள் கட்சி மாறுகிறீர்கள்.
உங்களுடைய சுயநலத்திற்காக, வெறிக்காக ஒன்றும் தேறவில்லை என்பதற்காக டிஎஸ்பி தலித் செத்துப் போய்விட்டார், கொலை செய்து விட்டார்கள், யுவராஜூக்கு இதில் தொடர்பு, மற்றவர்களுக்கு தொடர்பு, அரசு எதுவும் செய்யவில்லை என இந்த வழக்கை திசை திருப்பாதீர்கள்.
விஷ்ணுபிரியா ஒரு நேர்மையான பெண் போலீஸ் அதிகாரி. அதோடு நிறுத்துங்கள். அதைவிடுத்து ஏன் தலித், தலித் என குறிப்பிடுகிறீர்கள். அவங்க தலித்-னா மனுசங்க இல்லையா அவர்கள் எல்லாம்.
தலித் சமுதாயத்தைப் பற்றி பேசும் அனைத்து தலைவர்களுமே அம்மக்களுக்கு துரோகம் தான் பண்ணுகிறீர்கள். உங்களது பண ஆசைக்காக அந்த ஜாதியை அழித்துக் கொண்டிருக்கிறீர்கள். இது தான் உண்மை.
திருச்செங்கோட்டில் வந்து கேளுங்கள், அனைத்து ஜாதிக்காரர்களும் கண்ணீர் விடுகிறார்கள். நல்ல நேர்மையான பெண் போலீஸ் அதிகாரி இப்படி அநியாயமாக பாதியில் இறந்து விட்டாரே என அனைவரும் வேதனைப்படுகிறார்கள்.
இன்று, நானும் என் குடும்பத்தாரும் உயிரோடு இருப்பதற்கு டிஎஸ்பி விஷ்ணுபிரியா தான் காரணம். எனவே, தயவுசெய்து யாரும் இந்த வழக்கை திசை திருப்ப முயற்சிக்காதீர்கள். நியாயமான முறையில் இந்த வழக்கு விசாரணை நடத்தப்பட வேண்டும்.
முடிந்தால் என்னைப்போல் நேரடி ஆதாரங்களுடன் உதவி பண்ணுங்கள். இல்லையென்றால் அனைவரும் அமைதியாக இருங்கள். எல்லா எதிர்க்கட்சிக்கும் தான் நான் இதனைக் கூறுகிறேன்' என இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.