கருணாஸ் எம்எல்ஏ பதவியை பறிக்க சட்டத்தில் இடமுள்ளது.. கொந்தளிக்கும் கிருஷ்ணசாமி
கரூர்: கருணாஸ் எம்எல்ஏ பதவியை பறிக்க சட்டத்தில் இடமுள்ளது என்று, புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி பேட்டியொன்றில் தெரிவித்தார்.
புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கரூரில் இன்று நிருபர்களிடம் பேசுகையில் கூறியதாவது: எஸ்.சி. பட்டியலில் இருந்து தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை இதர பிற்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி அக்டோபர் 6ம் தேதி திருச்சி உழவர் சந்தையில் மாநாடு நடத்தப்படுகிறது. தேவேந்திர குல வேளாளர் என்ற ஒரே பெயரை அறிவிக்கும் முழு அதிகாரம் தமிழக அரசின் கையில் உள்ளது.
கருத்துரிமைக்கும் எல்லை, வரம்பு, நாகரீகம் உள்ளது. முதல்வர், காவல் துறை பற்றி நடிகர் கருணாஸ் பேசியதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறோம்.
இப்படியான வன்முறை பேச்சுக்காக, எம்.எல்.ஏ. பதவியை பறிக்கவும் சட்டத்தில் இடம் உள்ளது. எனவே கருணாசின் எம்.எல்.ஏ. பதவியை பறித்து கடுமையான சட்டத்தின் கீழ் அவரை கைது செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.