எம்.ஜி.ஆரையே பார்த்தவங்க நாங்க.. எங்ககிட்டயேவா... அழகிரிக்கு சவால் விடும் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர்..!!
அருப்புக்கோட்டை: எம்.ஜி.ஆரை பார்த்த கட்சி திமுக, அவரை எதிர்த்து அரசியல் செய்த கட்சி திமுக. எனவே யார் யாரைச் சந்தித்தாலும் திமுகவை ஒன்றுமே செய்ய முடியாது என்று பேசியுள்ளார் சாத்தூர் ராமச்சந்திரன் என்றும், கே.கே.எஸ்.ஆர். ராமச்சந்திரன் என்றும் அழைக்கப்படும் முன்னாள் அமைச்சரான ராமச்சந்திரன்.
அழகிரியை, வைகோ சந்தித்ததையும், அழகிரியை மற்ற கட்சித் தலைவர்கள் அடுத்தடுத்து சந்தித்து வருவதையும் குறிப்பிட்டு இப்படி விமர்சித்துள்ளார் சாத்தூரார்.
அதிமுகவில் பல காலமாக உலா வந்தவரும், எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகரும், ரசிகர் மன்றத் தலைவராகவும், அமைச்சராகவும் இருந்த சாத்தூர் ராமச்சந்திரனை திமுகவுக்குக் கூட்டி வந்ததே அழகிரிதான் என்பது நினைவிருக்கலாம். இந்த ராமச்சந்திரன் ஒரு காலத்தில் ஜெயலலிதா காலிலேயே விழுந்து எழுந்த முக்கியஸ்தர்களில் ஒருவராகவும் திகழ்ந்தவர்.
இதைத்தான் அழகிரியும் சமீபத்தில் ராஜபாளையம் சென்றபோது ஒரு வியாாரியை இந்தக் கட்சிக்குக் கூட்டி வந்தேன். அவரை அமைச்சராகவும் ஆக்கினேன். அதுதான் தப்பாகி விட்டது. அந்த வியாபாரியை கட்சி குட்டிச் சுவராக்கி வருகிறார் என்று கடுமையாக சாடியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
இந்த நிலையில் அழகிரியை மறைமுகமாக பெயர் குறிப்பிடாமல் விமர்சித்துள்ளார் ராமச்சந்திரன்.
யார் யாரைச் சந்தித்தாலும்
இதுகுறித்து காரியாபாட்டியில் நடந்த திமுக கூட்டத்தில் சாத்தூரார் பேசுகையில், எம்.ஜி.ஆரையே பார்த்த கட்சி திமுக. எனவே யார், யாரை சந்திச்சாலும், திமுக வை ஒன்றும் செய்ய முடியாது. எங்கள் உடலில் ஓடுவது திமுக ரத்தம் என்றார் அவர். பல காலமாக ஓடி வந்த அதிமுக ரத்தத்தை எப்போது அவர் திமுக ரத்தமாக மாற்றினார் என்பது ஆச்சரியமாகத்தான் உள்ளது.
சீக்கிரமே டெல்லிக்குப் போயிருவார்
மேலும் அவர் பேசுகையில், இப்போதே, நம் வேட்பாளர் பரபரப்பாகிவிட்டார். விட்டால், டெல்லிக்கே கிளம்பிவிடுவார் போல. சட்டசபை தேர்தலில், மாவட்டத்திலே, திருச்சுழி தொகுதி மட்டும் தான், மானத்தை காத்தது.
இது ச்சும்மா டிரெய்லர்தான்
சட்டசபை தேர்தலுக்கு ஒத்திகைதான் லோக்சபா தேர்தல். இதில் வெற்றி பெற்றால்தான், அடுத்து, நாம் எல்லாரும் பதவிக்கு வரமுடியும். திமுக வை யாரும் அழிக்க முடியாது. யார், யாரை சந்திச்சாலும், ஒன்னும் செய்ய முடியாது.
அவங்க எதையாவது எழுதுவாங்க
பேப்பர்காரங்க எதையாவது எழுதுவாங்க. எம்.ஜி.ஆரையே பார்த்த கட்சி திமுக. யார் போனாலும், திமுக,வை அசைக்க முடியாது. வைகோ போனார்; திமுக, அழிந்தா விட்டது என்றார் சாத்தூர் ராமச்சந்திரன்.
விரலை வெட்டினாலும்
அதேபோல இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த கூட்டம் ஒன்றில் பேசிய ராமச்சந்திரன், அழகிரியை வைகோ சந்தித்து ஆதரவு கேட்டுள்ளார். திமுக தொண்டன் விரலை வெட்டினாலும் மாற்றுக்கட்சிக்கு ஓட்டுப் போடமாட்டான் என்று கூறியிருந்தார்.
அதிமுகவினர் கிண்டல்
அதேசமயம், சாத்தூர் ராமச்சந்திரனின் திமுக ரத்தம், எம்.ஜி.ஆரையே பார்த்தவன் பேச்சுக்கு அதிமுகவினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். பல காலமாக எம்.ஜி.ஆரின் நிழலில் வாழ்ந்த, வளர்ந்த சாத்தூர் ராமச்சந்திரன் அதை மறந்து விட்டாரா என்று அவர்கள் கிண்டலடித்துள்ளனர்.