பெற்றோரை வீட்டுக்குள்ளேயே பூட்டிவிட்டு காதலனுடன் மாணவி “எஸ்கேப்”!
நாகர்கோவில்: கன்னியாகுமரியில் மாணவி ஒருவர் பெற்றோரை வீட்டிற்குள் வைத்துப் பூட்டிவிட்டு காதலனுடன் எஸ்கேப் ஆன சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி பகுதியை சேர்ந்த 11 ஆம் வகுப்பு மாணவி ஒருவர், தனது பக்கத்து வீட்டை சேர்ந்த வாலிபரை காதலித்து வந்தார்.
இந்த காதல் விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரிய வந்து, அவர்கள் மாணவியை கண்டித்தனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் பெற்றோரை வீட்டுக்கு உள்ளே வைத்து கதவை வெளி பக்கமாக பூட்டி விட்டு மாணவி தப்பினார்.
கதவு வெளிப்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததால் அவர்கள் கூச்சலிட்டனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டனர். மாணவியை தேடியபோது அவர் மாயமாகி இருந்தார்.
இதுகுறித்து வடசேரி காவல் நிலையத்தில் மாணவியின் தந்தை புகார் அளித்து இருந்தார். போலீசார் மாணவியின் காதலனின் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே நேற்று முன்தினம் மாணவி, தனது காதலனுடன் வடசேரி காவல் நிலையத்தில் ஆஜர் ஆனார். போலீசார் அறிவுரை கூறி மாணவியை பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். அவரது காதலனை எச்சரிக்கை செய்து அனுப்பினர்.