பராமரிப்பு பணிகளுக்காக கூடங்குளம் முதலாவது அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தம்!
திருநெல்வேலி: கூடங்குளத்தில் பராமரிப்பு மற்றும் எரிபொருள் நிரப்பும் பணிகளுக்காக முதலாவது அணு உலையின் மின் உற்பத்தி பணிகள் இரண்டு மாதங்களுக்கு நிறுத்தி வைக்கப்படுகின்றன என அணு உலை வளாக இயக்குனர் ஆர்.எஸ்.சுந்தர் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் ஒவ்வொன்றும் 1,000 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு அணு உலைகள் உள்ளன. இதில் முதலாவது அணு உலையில் தற்போது மின் உற்பத்தி நடந்து வருகிறது. இரண்டாவது அணு உலை மின் உற்பத்திக்காக தயார் நிலையில் உள்ளது. இந்நிலையில், முதலாவது அணு உலையின் மின் உற்பத்தி இரண்டு மாதங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவர், "கூடங்குளம் முதலாவது அணு உலையில் ஜூன் 24 ஆம் தேதி காலை 7 மணி வரை 687 கோடி யூனிட்கள் மின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.
முதலாவது அணு உலையின் வருடாந்திர பராமரிப்பு பணிகளுக்காகவும், எரிபொருள் நிரப்புவதற்காகவும் நேற்று முதல் இரண்டு மாதங்களுக்கு மின் உற்பத்தி பணிகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
பராமரிப்பு பணி முடிந்த பின் 1,000 மெகாவாட் வீதம் மின் உற்பத்தி துவக்கப்படும்.கூடங்குளம் இரண்டாவது அணு உலையில் வெப்பநீர் சோதனை ஓட்டம் மற்றும் ஒருங்கிணைந்த சோதனைகள் நிறைவு பெற்றுவிட்டன. இது தொடர்பான அறிக்கை, ஒழுங்குமுறை ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.