இதுக்குப் பதில் சொல்லிருங்க.. உங்க கட்சியில் இணைகிறேன்.. ரஜினிக்கு சுப. உதயகுமாரன் சவால்
தமது கேள்விகளுக்கு ரஜினிகாந்த் பதிலளித்தால் அவரது கட்சியில் இணைவதாக கூடங்குளம் போராட்ட குழு தலைவர் சுப. உதயகுமாரன் தெரிவித்துள்ளார்.
சென்னை: தாம் முன்வைக்கும் 4 கேள்விகளுக்கு உரிய பதிலை ரஜினிகாந்த் தெரிவித்துவிட்டால் அவரது கட்சியில் இணைவேன் என கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டக் குழுவின் தலைவர் சுப. உதயகுமாரன் தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வரக் கூடாது தமிழர் இயக்கங்கள் குரல் கொடுத்து வருகின்றன. அண்மையில் தந்தி டிவி சேனல் நடத்திய விவாதத்தில் சுப. உதயகுமாரன், நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோர் ரஜினியை கடுமையாக விமர்சித்தனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த ரஜினி ரசிகர்கள், இருவரையும் தாக்க முயன்றனர். இச்சம்பவத் தொடர்பாக இருவருமே ஃபேஸ்புக் பக்கத்தில் கண்டனங்களைப் பதிவு செய்திருந்தனர்.
உதயகுமாரன்
இந்நிலையில் சுப. உதயகுமாரன் இன்று தம்முடைய பக்கத்தில் ரஜினிகாந்த் தொடர்பாக ஒரு பதிவு போட்டுள்ளார். அதில் உதயகுமாரன் கூறியுள்ளதாவது:
மாவட்டங்கள் தெரியுமா?
திரு. ரஜினிகாந்த் அவர்களின் கட்சியில் இணைகிறேன்! ஒரு வெற்றுத் தமிழக வரைபடத்தில் தமிழ் நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் திரு. ரஜினிகாந்த் அவர்கள் சரியாக அடையாளப்படுத்துவாரா? நெடுவாசல், வடகாடு, கதிராமங்கலம், திட்டக்குடி போன்ற ஊர்கள் பற்றி ஐந்து, ஐந்து வரிகள் எழுதித் தருவாரா?
கூடங்குளம்
எங்கள் இடிந்தகரைப் பள்ளி மாணவி ஒருவரோடு கூடங்குளம் அணுமின் திட்டம் பற்றி ஐந்து நிமிடம் ஏதாவது ஒரு தொலைக்காட்சியில் விவாதிப்பாரா?
இணைகிறேன்
கெய்ல், என்.பி.சி.ஐ.எல்., ஓ.என்.ஜி.சி., மாப்ஸ், ஐ.என்.ஓ. இவையெல்லாம் என்னவென்று சொல்லி, இரண்டிரண்டு வாக்கியங்கள் பேசுவாரா? இவற்றைச் செய்தால், அவரும், ஆண்டவனும் சேர்ந்து துவங்கப்போகும் கட்சியில் இணைந்திட அணியமாய் இருக்கிறேன் நான்.